கிறித்துவ தேவாலய ஊழியர்களுக்கு 8 நற்செய்திகள்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
கிறித்துவ தேவாலய பணியாளர்கள் நல வாரியத்தின் கீழ் 8 வகையான அரசு உதவிகளைப் பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதற்கான புதிய இணையதளப் பயன்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தகுதியுடைய தேவாலயப் பணியாளர்கள் அனைவரும் இந்த வாரியத்தில் இணைந்து அரசின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2022 முதல் தொடரும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்
தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு பல்வேறு நல வாரியங்களை அமைத்துச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கிறித்துவ தேவாலயங்களில் எவ்வித நிலையான மாதாந்திர ஊதியமும் இன்றி, சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்து வரும் உபதேசியார்கள் மற்றும் இதர பணியாளர்களின் நலனைக் காக்கும் பொருட்டு "கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வாரியத்தின் மூலம், பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பயன் அளிக்கும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் முதியோர் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பின்வரும் 8 முக்கிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
1.விபத்து ஈட்டுறுதித் திட்டம்: பணியின் போதோ அல்லது எதிர்பாராத விதமாகவோ விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் கணிசமான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2.இயற்கை மரண உதவித்தொகை: வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் இயற்கை எய்தும் பட்சத்தில், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
3.ஈமச்சடங்கு செலவுத்தொகை: உறுப்பினர்களின் மறைவின் போது, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான ஈமச்சடங்கு உதவித்தொகையும் உடனடியாக வழங்கப்படுகிறது.
4.கல்வி உதவித்தொகை: பணியாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியைக் கருத்தில் கொண்டு, பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
5.திருமண உதவித்தொகை: உறுப்பினர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில், திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
6.மகப்பேறு உதவித்தொகை: பெண் பணியாளர்கள் அல்லது ஆண் உறுப்பினர்களின் மனைவியருக்கு மகப்பேறு கால பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
7.மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்: பணியாளர்களின் கண் பார்வையைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் வாங்கும் மூக்குக்கண்ணாடிகளுக்கான செலவுத்தொகையை ஈடு செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
8.முதியோர் ஓய்வூதியம்: குறிப்பிட்ட வயது நிறைவடைந்த பின்னர், முதுமைக் காலத்தில் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் உறுப்பினர்களுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியம் (Pension) வழங்கப்பட்டு வருகிறது.
வாரியத்தில் இணைய யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?
இந்த நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, மேற்கண்ட 8 வகையான அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்குச் சில முக்கியத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி;
* விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்களாக (கிறித்துவ இனம்) இருக்க வேண்டும்.
* உறுப்பினராகப் பதிவு செய்ய விரும்புவோர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயது நிறைவு பெறாதவராகவும் (18 முதல் 60 வயதிற்குள்) இருத்தல் அவசியம்.
* கிறித்துவ தேவாலயங்களில் முறையான நிலையான மாதாந்திர ஊதியம் என்று எதுவும் இல்லாமல், தேவாலயப் பணிகளையே முதன்மையாகக் கொண்டு வாழும் பணியாளர்கள் இதற்குத் தகுதி பெறுவர்.
* குறிப்பாக, தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள் மற்றும் கல்லறைத் தோட்டப் பணியாளர்கள் (Graveyard workers) இவ்வாரியத்தில் இணையலாம்.
* இது தவிர, கிறித்துவ அனாதை இல்லங்கள் (Christian Orphanages) மற்றும் தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களில் (Leprosy Rehabilitation Homes) தங்கிச் சேவை புரிந்து வரும் பணியாளர்களும் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து பயன் பெற முழுத் தகுதியுடையவர்கள் ஆவர்.
எளிமையான ஆன்லைன் பதிவு
நல வாரியத்தில் உறுப்பினர்கள் தங்களைப் புதியதாகப் பதிவு செய்வதிலும், ஏற்கனவே பதிந்துள்ள உறுப்பினர்கள் தங்களுக்குரிய நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதிலும் நிலவி வந்த தாமதங்களைத் தவிர்க்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. விண்ணப்ப செயல்முறைகளை மிகவும் எளிதாக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும் பிரத்யேக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் தகுதியுள்ள நபர்கள், இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள www.cwb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவே தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கணினி மையங்கள் மூலமாகவோ அல்லது தங்களது சுய விபரங்களைக் கொண்டோ நேரடியாக இணையவழியில் விண்ணப்பித்து, எளிய முறையில் வாரியத்தின் பயன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு யாரைத் தொடர்பு கொள்வது?
இந்த நல வாரியப் பதிவு, தேவையான ஆவணங்கள் மற்றும் உதவித்தொகை கோருதல் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், பொதுமக்கள் மற்றும் தேவாலயப் பணியாளர்கள் தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு நேரில் செல்லலாம்.
அங்கு இயங்கி வரும் "மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை" (DBCWO) அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை நேரடியாகத் தொடர்பு கொண்டு முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் விரிவாகத் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள கிறித்துவ தேவாலயப் பணியாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























