தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
மயிலாடுதுறை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து தட்டிக்கேட்ட சிறுமியின் உறவினர்கள் இருவரை அந்த முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 70). கூலித் தொழிலாளியான இவர் மூன்றாம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. விவரம் அறியாத சிறுமி என்பதால் முதலில் இதனைச் சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளார், தொடர்ந்து மணியின் அத்துமீறல்கள் எல்லை மீறியதால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
பெற்றோரிடம் முறையிட்ட சிறுமி
மணியின் தொடர் பாலியல் தொல்லையினால் அச்சமடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து தங்களது உறவினர்களிடம் ஆலோசித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உறவினர்களான ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் என இருவர், இதுகுறித்து மணியிடம் நேரில் சென்று கேட்டுள்ளனர்.
தட்டிக்கேட்டவர்களுக்கு நேர்ந்த கத்திக்குத்து
சிறுமியின் உறவினர்கள் இருவர் முதியவர் மணியின் வீட்டிற்குச் சென்று, சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டது குறித்து தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, தனது தவறை ஒப்புக்கொள்ள மறுத்த மணி, அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த மணி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து, நியாயம் கேட்க வந்த சிறுமியின் உறவினர்கள் இருவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
மணியின் கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தாயார், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், அதனைத் தட்டிக்கேட்ட உறவினர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் குறித்தும் அவர் புகாரில் விவரித்திருந்தார். இப்புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதும், தட்டிக்கேட்டவர்கள் குத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூலித் தொழிலாளி மணி மீது போக்சோ (POCSO) சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைப்பு
கைது செய்யப்பட்ட முதியவர் மணியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு உடன்பட மறுத்த அவரிடம் உரிய முறையில் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் (கோர்ட்) ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, முதியவர் மணியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
7 வயது சிறுமிக்கு 70 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனைத் தட்டிக்கேட்ட உறவினர்களுக்குக் கத்திக்குத்து விழுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்























