தவெக அலுவலக வாசலில் காங்கிரஸினர்... ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு கொதித்தெழுந்த எம்பி மாணிக்கம் தாகூர்
ஆதவ் அர்ஜுனின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல, அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை - எம்பி மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியினர் பலர் தவெக அலுவலக வாசலில் காத்துகிடப்பதாக பேசிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு எம்பி மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
ஆதவ் அர்ஜுனின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல, அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான வரலாற்றுப் பெரும் இயக்கம். நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுகிறோம், ஒன்றாக முடிவு செய்கிறோம், ஒன்றாக செயல்படுத்துகிறோம். இந்த அமைப்பின் வரலாறும் மரபும் தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் தெளிவாகச் சொல்கிறேன் காங்கிரஸ் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த அமைப்பில் இடமில்லை. நாங்கள் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும், தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் காட்டிய மக்கள் பாதையையும் உறுதியாக பின்பற்றுகிறோம். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிளவை உருவாக்கும் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அச்சமின்றி தினமும் போராடி வருகிறார். அவரது தலைமையிலும், மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலிலும், கட்சி உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறது. பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பதிலடி உறுதியாகவும் கொடுப்போம். இது சாரசரி கட்சி அல்ல ..இது கொள்கைக்கான கட்சி, தியாகம் எங்கள் அடையாளம். ஒற்றுமை எங்கள் வலிமை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.























