தமிழக அரசு திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமானவர் சிவி சண்முகம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை:
அவரது மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் நலத்திட்டங்களில் முதலமைச்சரின் பதவியையும், புகைப்படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், முதலமைச்சரின் தனிப்பட்ட பெயரை பயன்படுத்துவது தவறு.
அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டுவதை அனுமதிக்க முடியாது. இதனால், தமிழக அரசு நலத்திட்டங்களில் முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களையோ, ஆளும் கட்சியின் சின்னம்/கொடியையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நலத்திட்டங்கள் பாதிக்கப்படாது:
இந்த வழக்கு பொது நலன் கருதி தொடரப்பட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறுவதாகவும் சிவி சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்க நேரம் கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் இந்த உத்தரவு நலத்திட்டங்களின் செயல்பாட்டை பாதிக்காது எனவும், தேர்தல் ஆணையம் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
பெயர் மாற்றப்படுமா?
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள பெயர்கள் நீக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உங்களுடன் ஸ்டாலின், மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின் என்று பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் பெயரில் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவது திமுக-விற்கு ஒரு விதத்தில் தேர்தல் பரப்புரை போல அமைவதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றனர். மேலும், அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு தனி நபரின் பெயரை பயன்படுத்தி அதை தேர்தலுக்கு வாக்குகளாக மாற்றவும் முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கருதுகின்றனர்.
இதன் காரணமாகவே, சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் எதிரொலியாகவே சிவி சண்முகம் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.





















