கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் கருத்து கேட்பு கூட்டம்
சார் பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பதிவுத்துறையில் தற்போது ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் பதிவு பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும் வருவாய்த்துறையின் தமிழ் நிலம் மென்பொருளுடன் ஒருங்கிணைந்து தானியங்கி பட்டா மற்றும் தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சில வருவாய் கிராமங்கள் வேறு வருவாய் மாவட்டத்தின் ஆட்சி எல்லையில் அமைந்துள்ள நிலை உள்ளது. பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய் துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது.

எனவே, ஒரு வருவாய் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் அந்த வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பதிவு மாவட்டத்தின் ஆட்சி எல்லைக்குள் அமையும் வகையில் சார் பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் பதிவு மாவட்ட எல்லைகளை சீரமைக்க பதிவுத்துறைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது. எனவே, அரசாணைக்கு உட்பட்டு, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசாண்டர் திருமலை, முதலைப்பட்டி, வடசேரி, புழுதேரி ஆகிய வருவாய் கிராமங்கள் திருச்சி வருவாய் மாவட்டத்தின் ஆட்சி எல்லைக்குள் அமைந்துள்ள உறையூர் மற்றும் 1 எண் இணை சார்பதிவகம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களின் ஆட்சி எல்லைக்குள் அமையப்பெற்று மேற்படி சார் பதிவகங்களின் வழி ஆணைப்பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசாணையின் படி இந்த கிராமங்களை கரூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட நங்கவரம் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைத்தல் தொடர்பாகவும், கரூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம், நாகனூர், தோகைமலை, பொருந்தலூர், கல்லடை, பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி, பில்லூர் ஆகிய கிராமங்கள் திருச்சி வருவாய் மாவட்டத்தின் ஆட்சி எல்லைக்குள் அமைந்துள்ள மணப்பாறை சார் பதிவகத்தின் ஆட்சி எல்லைக்குள் அமையப்பெற்று, அந்த சார்பதிவகத்தின் வழி ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது.

அரசாணையின் படி இந்த கிராமங்களை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்துடன் இணைத்தல் தொடர்பாகவும், திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்கூர்ணம் என்ற கிராமம் கரூர் வருவாய் மாவட்டத்தின் ஆட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அரவக்குறிச்சி சார் பதிவகத்தின் ஆட்சி எல்லைக்குள் அமையப்பெற்று அந்த சார்பதிவகத்தின் வழி ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த கிராமத்தினை அரசாணையின்படி திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாகவும், பொதுமக்கள் தங்கள் கருத்துகளை காலை 11 மணியளவில் கரூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பொதுமக்கள் கருத்துக்கு கேட்பு கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















