![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
கடைகளை காலி செய்ய சொன்ன மாநகராட்சி; போராட்டத்தில் குதித்த தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் - கரூரில் பரபரப்பு
பாதிக்கப்பட்ட வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைகளை காலி செய்யக் கூடாது எனவும், அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் புகார் அளித்துள்ளனர்.
![கடைகளை காலி செய்ய சொன்ன மாநகராட்சி; போராட்டத்தில் குதித்த தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் - கரூரில் பரபரப்பு Karur news Trolley shop owners staged road blockade against corporation - TNN கடைகளை காலி செய்ய சொன்ன மாநகராட்சி; போராட்டத்தில் குதித்த தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் - கரூரில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/d60f88877ebdf01ac46b88148a4f12241718679664703113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூரில் திடீரென கடைகளை காலி செய்ய சொன்னதால், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கரூர் - திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர் தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை விரிவாக்கம் செய்வதற்காக மாநகராட்சி சார்பில் கடைகளை அகற்றக் கூறி அறிவுறுத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைகளை காலி செய்யக் கூடாது எனவும், அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால், மருத்துவமனை வாயிலில் கடை வைத்து நடத்தும் சிறு வியாபாரிகள் இன்று திடீரென கரூர் - திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியில் குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பசுபதிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறு வியாபாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் இப்படி திடீரென போராட்டம் நடத்தக்கூடாது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவித்தனர்.
இதனை கடை உரிமையாளர்கள் ஏற்க மறுத்தனர். அப்போது காவல் ஆய்வாளர் முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்ய நேரிடும் என எச்சரித்தார். ஆயினும், வியாபாரிகள் தொடர்ந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஒரு சிலரை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக மாநகராட்சி சார்பாக வியாபாரிகளுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர்களை மாற்று இடத்திற்கு தங்களது வணிகங்களை செய்து கொள்ள கோரிக்கை வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தரைக்கடை வியாபாரிகள் நோட்டீசை பெற்று இதுவரை காலி செய்யாமல் இருந்த நிலையில் மாநகராட்சி சார்பாக அந்த இடத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமமின்றி பயணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு உள்ளனர். தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஊழியர்கள் அந்த கடைகளை அப்புறப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடை காலி செய்யும் நேரத்தில் வியாபாரிகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)