சுதந்திர தின விடுமுறை: 3 நாட்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம்! குறையின்றி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள்
13.08.2025 முதல் 15.08.2025 அதிகாலை 3.00 மணி வரை, மொத்தம் 5,780 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 3,13,900 பயணிகள் மாநிலம் முழுவதும் பாதுகாப்பாகச் சென்றடைந்துள்ளனர்

சென்னை: சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துத் துறை மாநிலம் முழுவதும் பெரும் அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய நகரப் பகுதிகளில் மக்கள் நெரிசல் காணப்பட்டது.
பேருந்து இயக்க விபரங்கள்
14.08.2025 நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகள் அனைத்தும் சேவையில் இருந்தன. இதனுடன், 1,160 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மொத்தம் 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டு, நேற்று ஒரே நாளிலேயே 1,78,860 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இதற்கு முந்தைய நாள், 13.08.2025 அன்று, 2,092 வழக்கமான பேருந்துகளுடன், 436 சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. அன்றைய தினம் 1,35,040 பயணிகள் பயணம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம், நேற்று (14.08.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் 15.08.2025 அதிகாலை 03.00 வரை வழக்கமாக… pic.twitter.com/HHvtMLEuz5
— ArasuBus (@arasubus) August 15, 2025
மூன்றே நாட்களில் 3.13 லட்சம் பயணிகள்
13.08.2025 முதல் 15.08.2025 அதிகாலை 3.00 மணி வரை, மொத்தம் 5,780 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் 3,13,900 பயணிகள் மாநிலம் முழுவதும் பாதுகாப்பாகச் சென்றடைந்துள்ளனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் திரு. ஆர். மோகன் கூறுகையில், “விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகள் சேவையை எளிதாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்” என்றார்.
மேலும் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்களுக்காகவும் இதே அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















