சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! கடத்தல் பயணியின் அதிர்ச்சி பின்னணி?
"சென்னை விமான நிலையத்தில் மூன்று கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது"

தாய்லாந்து நாட்டில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.3 கோடி மதிப்புடைய, 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா பார்சல்களை தானியங்கி செல்ஃபி வீடியோ கருவி பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வந்ததை, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்டுபிடித்து, கடத்தல் பயணியை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள்
தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, லயன் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக, தாய்லாந்துக்கு சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார்.
அந்த பயணி மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். அப்போது செல்ஃபி முறையில் வீடியோ எடுக்கக்கூடிய, தானியங்கி புகைப்பட கருவி ஒன்று எடுத்து வந்தார். அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை நடத்தினர்.
சர்வதேச மதிப்பீடு ரூ.3 கோடி
அதனுள் 8 பாக்கெட்டுகள் ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் சுமார் 3 கிலோ, ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், கஞ்சா கடத்தல் பயணியை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல் பயணி மீது போதைப் பொருட்கள் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















