Appavu: பண்போட நடங்க சிஎம் சார்.. எங்க கை சும்மா இருக்காது.. விஜயை விளாசிய அப்பாவு!
ஐந்து நிமிடம் பேச்சில் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்று கொக்கரிக்கிறீர்கள். ஆதாரம் இன்றி பார்ட்டி பண்ட் என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள் என விஜயை அப்பாவு விமர்சித்துள்ளார்.

நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் தான் திமுக எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பதிலடி கொடுத்துள்ளார். அவரை கைது செய்தது தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. கைது
கடந்த ஜூலை 18ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பங்கேற்று முதல்வர் விஜயை கடுமையான விமர்சித்தார். அவரை ஒருமையில் பேசிய மார்க்கண்டேயன் எலும்பை உடைப்பேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அவரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே தவெக தரப்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் இன்று காலை போலீசார் அவரை கைது செய்தனர். தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த வகையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்?
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனத்தை எளிதில் கடந்து சென்று விடுவார்கள். அவர்கள் வழிவந்த தளபதி மு.க.ஸ்டாலின் தன்னைப் பார்த்து முட்டாள் முதல்வரே என்று ஒருவர் விமர்சித்த போது முட்டாள் இப்படித்தான் பேசுவான் என்று கடந்து சென்றார்.
சிஎம் சார், நீங்களோ மாண்பு நிறைந்த சட்டப்பேரவையில் உங்கள் அப்பாவை எங்கே காணோம் ? என்று நையாண்டி செய்கிறீர்கள். ஐந்து நிமிடம் பேச்சில் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்று கொக்கரிக்கிறீர்கள்.
ஆதாரம் இன்றி பார்ட்டி பண்ட் என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள். கரூர் பொதுக் கூட்டத்திலே ஓடு ஓடு ஓடு ஓடு என்று அங்க அசைவுடன் பாட்டு பாடி இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்கள்..
நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் பதில் தந்துள்ளார் மார்க்கண்டேயன். எங்களை சட்டமன்றத்திற்குள் பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால் எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்? என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார்.
Also Read: திமுக MLA மார்க்கண்டேயன் கைது.. அன்றே கணித்த ஆர்.எஸ்.பாரதி.. விஜய் மீது தாறுமாறாக விமர்சனம்!
முட்டாள் முதல்வரே என்று பேசியவர்க்கும், தம்பி குடும்பத்தை வீடு புகுந்து தாக்கியவருக்கும், லட்சக்கணக்கான ஒரு திரண்ட மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள் உங்கள் கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்கட்சியினருக்கு ஒரு நியாயமா?
உதவி கேட்டு வந்த த.வெ.க இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை எம்.எல்.ஏ-வாக உங்கள் கட்சியில் தொடர பெருந்தன்மையுடன் அனுமதித்து உள்ளீர்கள். உங்களோடு இருப்பவர்களின் குற்றங்களை பொறுத்துக்கொள்ள பழகிய உங்களுக்கு எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனது ஏன் ?.. தலைவர்களின் படங்களை வெறுமனே அலங்கரித்தால் மட்டும் போதாது. அவர்களது பண்பும் வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















