அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. திமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார்.

முன்னாள் அமைச்சர் நீலோபர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைய இருக்கிறார். வாணியம்பாடியில் நடைபெற உள்ள மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘நான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்தேன். தற்சமயம் எனது சொந்த சூழ்நிலை காரணமாக கழகத்தில் தொடர்ந்து பணிபுரிய இயலவில்லை. எனவே நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது விலகல் கடித்ததை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை தாங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி மற்றும் கழக நிர்வாகிகளுக்கும். குறிப்பாக நிர்வாகிகளுக்கும், நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்வர் ராஜாவை தொடர்ந்து நீலோபர் திமுகவில் இணைய உள்ளதால் சிறுபான்மையினர் வாக்கு அதிமுக வருவது சந்தேகம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவில் முக்கிய தலைவர்களாக இருந்த வைத்திலிங்கம், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜா உள்ளிட்டோர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது நீலோபர் இணைய உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலோபர் சில காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது திமுகவில் இணைகிறார். சட்டமன்றத்தேர்தலை முன்னிட்டு அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கூறப்படுகிறது.
திமுக பிரமாண்ட மாநாடு
திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் நகரத்தில் நகரத்திலிருந்து ரோடு ஷோ மூலம் மாநாட்டிற்கு செல்கிறார். அதன் பின்பாக சாலை மார்க்கமாக செல்லும்போது மக்களை சந்தித்து கை அசைத்தபடி மாநாட்டு திடலுக்கு மாலை நேரத்தில் சென்றடைந்து அங்கு கூடியிருக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பேச உள்ளார்.























