ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம், 12 மாநிலங்களில் SIR பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் 92.04 சதவீத SIR படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம்(SIR), தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 92.04 சதவீத SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் SIR பணிகள்
இந்திய தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை, சிறப்பு தீவிர திருத்தம் என்ற பணியின் மூலம் கண்காணித்து வருகிறது. இந்த செயல்முறை மூலமாக, இறந்தவர்கள், போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள், இருப்பிடத்தை மாற்றியும் வாக்குச்சீட்டை திருத்தாதவர்கள் ஆகியோரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதோடு, உண்மையான வாக்காளர்களை உறுதி செய்வதே நோக்கம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த SIR நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக குரல் எழுப்பி வருகின்றனர். SIR என்ற பெயரில், பாஜக தங்களுக்கு எதிராக வாக்களிப்போரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயல்வதாகவும், தங்களது ஆதரவாளர்களை அதில் சேர்க்க முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
SIR குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை
தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, மொத்தத்தில் 6,41,14,582 கணக்கீட்டு படிவங்கள் அச்சிடப்பட்டதாகவும், அதில், இன்றுவரை, 5,90,13,184 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 92.04 சதவீத படிவங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
மேலும், வாக்காளர்கள், கணக்கீட்டு படிவங்களில் தேவையான, தொடர்புடைய விவரங்களை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அதோடு, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களை சேகரிக்க, வீடு தோறும் வருகை தரும்போது, வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேவையான விவரங்களை படிவங்களில் நிரப்புவதற்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்வார்கள் என்றும், இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு, வாக்காளர்கள் தங்கள் ஒத்துழைப்பை அதிகாரிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















