வெட்கமா இல்ல... அமைச்சர் பதவி வாங்கியிருக்கீங்க..என்ன கிழிக்கப் போகிறாய் - மொத்தமாய் ரவுண்டு கட்டிய ஆராசா
இரவு முழுவதும் திமுகவை திட்ட ரிகர்சல் பார்த்திருப்பார் போல முதலமைச்சர் விஜய் -ஆ.ராசா

அவர்களை அமைச்சராக்கிய உங்களுக்கும் வெட்கம் இல்லை, அமைச்சர் பதவி வாங்கிய அவர்களுக்கும் வெட்கம் இல்லை என திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா கடுமையாக சாடினார்.
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க. அரசின் ‘நீட்’ தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டிக்கும் வகையிலும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர் அணியினர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அமைச்சர் பதவி வாங்கியவர்களுக்கு வெட்கம் இல்லை
கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா பேசுகையில், ஒன்றிய அரசை எதிர்த்து துணிச்சலோடு கேள்வி கேட்காத ஒரு சோபா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய ஆட்சியின் அக்கிரமங்களை கேட்காத ஒரு பொம்மை அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் ஆட்சி அமைத்து உள்ளீர்கள், அவர்களை அமைச்சராக்கிய உங்களுக்கும் வெட்கம் இல்லை, அமைச்சர் பதவி வாங்கிய அவர்களுக்கும் வெட்கம் இல்லை என கடுமையாக சாடினார்.
டெல்லியை எதிர்த்து பேச தைரியம் இருக்கா?
வெட்கம் கெட்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பதால்தான் மோடிக்கு இவ்வளவு தைரியம், மோடி அரசை எதிர்த்து பேச இந்த அரசுக்கு அருகதை உள்ளதா என கேள்வி எழுப்பிய அவர் ஒரே ஒரு வார்த்தை டெல்லியை எதிர்த்துப் பேச தமிழ்நாட்டு அமைச்சருக்கு தைரியம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “உங்களிடம் உள்ள எந்த சோபா செட் டப்பாவிற்காவது தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா?. பாசிசத்தை எதிர்ப்பவராக இருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தை கூட்டி நீட்டிற்கு எதிராக தீர்மானத்தை இயற்ற தயாரா?. அவையில் திமுகவை விமர்சிக்கும்போது மட்டும் script பார்க்காமல் முதல்வர் பேசுகிறார். இரவு முழுவதும் திமுகவை திட்ட ரிகர்சல் பார்த்திருப்பார் போல எனக்கு கிடைத்த தகவல் முதலமைச்சர் விஜய் நிலை கண்ணாடி முன்னாடி நின்று ரிகர்சல் பார்ப்பதாக தகவல்” என்றார்.
தமிழ்நாட்டின் சிறைகளை நிரப்புவோம்
ஆட்சிக்கு வந்து என்ன கிழிக்கப் போகிறாய் என்று சொல்லு, குறை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. நீங்கள் லூசுகள் சட்டமன்றத்தில் குறைகளை சொல்லு என்ற அவர், எங்களை விமர்சித்து விட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுகவை விமர்சிக்கும் விஜய், தனது ஆட்சியில் என்ன கழட்டுவீர்கள் என சொல்ல வேண்டும். பாசிசம், பாயசம் என பேசிய முதலமைச்சர் விஜய் மத்திய அரசை எதிர்த்து பேச முடியவில்லை என்றும் திமுக ஆட்சியில் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் போல் மோடியும் கொக்கரித்தால் திமுக தலைவர் அனுமதி பெற்று மாணவரணி இளைஞரணியும் தமிழ்நாட்டின் சிறைகளை நிரப்புவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
மோடி அரசாங்கத்திற்கு மௌனம் காத்து தமிழ்நாட்டின் சோபா செட் அரசாங்கம் முட்டு கொடுத்து வருகிறது. முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டு மக்களின் மீது அக்கறை இருந்தால் குறை சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று சொல்ல வேண்டும் என்றார். விரைவில் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கத்தை எதிர்த்து நாடு தழுவிய பெரிய போராட்டத்தை திமுக நடத்தும் என்று கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















