Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா? 20 ஆயிரம்+ அரசுப் பேருந்துகள் ரெடி- புகார் எண்கள் அறிவிப்பு!
Diwali Special Bus 2025: புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 20,378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16/10/2025 முதல் 19/10/2025 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 20,378 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அக்.21 முதல் 23 வரை திரும்பிவர சிறப்புப் பேருந்துகள்
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் பயணிகளுக்காக 21/10/2025 முதல் 23/10/2025 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,253 சிறப்புப் பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஆக மொத்தம் 15,129 ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14436 என்ற தொலைபேசி எண்ணை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.
மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்
பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.






















