Chittoor Thatchur Highway: தச்சூர் டூ சித்தூர் நெடுஞ்சாலை 96KM ரெடி - 90 நிமிடங்களே, திறப்பு எப்போது? கட்டணம் எவ்வளவு?
Chittoor Thatchur Expressway: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சித்தூர் முதல் தச்சூர் வரையிலான நெடுஞ்சாலையை ஊத்துக்கோட்டை வரையில் சோதனை முயற்சியில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

Chittoor Thatchur Highway: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சித்தூர் முதல் தச்சூர் வரையிலான நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை வரையில் மே 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கபப்டும் என அறிவித்துள்ளது.
சித்தூர் - தச்சூர் தேசிய நெடுஞ்சாலை:
சித்தூர் - தச்சூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், சித்தூர் தொடங்கி ஊத்துக்கோட்டை வரையிலான பகுதியை சோதனை முயற்சியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம்ன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மே 1ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊத்துக்கோட்டை தொடங்கி தச்சூர் வரையிலான வழித்தடத்திற்கான பணிகள், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாலை பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள பெங்களூரு - சென்னை இடையேயான விரைவுச்சாலையிலும் நிலவக்கூடிய கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக துறைமுகம் செல்லும் வாகனங்கள் இந்த சித்தூர் டூ தச்சூர் சாலைக்கு மாறுவதன் மூலம், ஸ்ரீபெரும்புதூர் - மதுரவாயல் பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க முடியுமாம்.
116 கிலோ மீட்டர் நீளத்திற்கான வழித்தடம்..
116 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த பசுமை வழித்தடமானது ஆந்திர மாநிலம் சித்தூரில், பெங்களூரு - சென்னை விரைவுச் சாலையின் சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து நீண்டு, தேசிய நெடுஞ்சாலை -5-க்கு அருகே தச்சூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை பெரிபெரல் ரிங் ரோட் பகுதியில் முடிவடைகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் பொருட்கள் எந்தவித தடையுமின்றி சென்னை துறைமுகத்திற்கு செல்லும் வகையில் இந்த வழித்தடமானது உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையிலிருந்து சித்தூர் செல்ல 4 முதல் 6 மணி நேரங்கள் வரை ஆன நிலையில், தற்போது அந்த பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்களாக குறையுமாம்.
4 கட்டங்களாக ஆறுவழி சாலை
இந்த 6 வழிப்பாதைக்கான பணிகளானது 4 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வரதராஜுலு பகுதியில் தொடங்கி குமராஜபேட் வரையில் 43.8 கிலோ மீட்டர் தூரமாகவும், குமராஜபேட்டிலிருந்து வீர காவேரி ராஜபுரம் வரை 61.38 கிலோ மீட்டர் தூரமாகவும், வீர காவேரி ராஜபுரம் பகுதியிலிருந்து போந்தவாக்கம் (ஊத்துக்கோட்டை) வரை 96.04 கிலோ மீட்டர் தூரமாகவும், போந்தவாக்கம் தொடங்கி கன்னிகைப்பேர் வரை 116.1 கிலோ மீட்டராகவும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரதராஜுலு தொடங்கி போந்தவாக்கம் வரையிலான 96.04 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முழுமையாக முடிவுற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொளுத்தும் வெயிலால் சரியும் நீர் மட்டம்.! குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா.? சென்னை ஏரிகளின் நிலவரம் என்ன.?
4-வது கட்டத்தில் தாமதமாகும் பணிகள்:
நான்காவது கட்டத்தில் இடம்பெற்றுள்ள போந்தவாக்கம் டூ கன்னிகைப்பேர் வரையிலான 20.06 கிலோ மீட்டர் நீளத்திற்கான முழு பணிகளும் தமிழக எல்லையிலேயே அமைந்துள்ளன. இந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சுரங்கப் பணிகளுக்கான அனுமதிகள் மற்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டில் எளிதில் கிடைப்பதில்லை எனவும், இங்கு கட்டுமானப் பணிகளுக்கான மண் குளங்களிலிருந்து மட்டுமே பெற இயலும் என்பதாலும் பணிகள் தாமதமாகின்றனவாம். பருவமழைக் காலத்தில் மணலை எடுக்க முடியாததால், நீர் நிலைகளில் நீர் இருப்பின் அளவு குறையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாம்.

இந்த மொத்த வழித்தடத்திற்கான செலவு 5 ஆயிரத்து 486 கோடியே 32 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டத்தில் 24 பெரிய மேம்பாலங்கள், 17 சிறிய மேம்பாலங்கள், 16 இடங்களில் மேம்பாலங்களுக்குள் வாகனங்கள் நுழைந்து செல்லும் வசதி, 39 இடங்களில் இலகுரக வாகனங்கள் கடந்து செல்லும்பகுதி, 7 இடங்களில் வழிமாற்றங்கள், 4 இடங்களில் ரயில்வே வழிமாற்றங்கள் மற்றும் 112 இடங்களில் பயன்பாட்டிற்கான க்ராஸிங்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சுங்கக் கட்டணம் எவ்வளவு?
பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ள தச்சூர் முதல் ஊத்துக்கோட்டை வரையிலான சாலைக்கான சுங்கக் கட்டணமும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாம். அதன்படி,
- சித்தூர் தொடங்கி தச்சூர் வரையிலான 116 கிலோ மீட்ட தூரத்திற்கு காரில் ஒருமுறை பயணிக்க 285 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊத்துக்கோட்டை வரையிலான தற்போதைய பயணத்திற்கு 210 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாம்.
- இதேபோன்று இலகுரக வர்த்தக வாகனத்திற்கு 350 ரூபாயும்
- பேருந்து மற்றும் ட்ரக்குகளுக்கு 735 ரூபாயும்
- 3 ஆக்சில் வாகனங்களுக்கு 800 ரூபாயும்
- 4 முதல் 6 ஆக்சில் வாகனங்கலுக்கு ஆயிரத்து 155 ரூபாயும்
- 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்சில் கொண்ட வாகனங்களுக்கு ஆயிரத்து 405 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாம்.
ட்ரெண்டிங் செய்திகள்























