தமிழகத்தில் ஆட்டோ நம்பர் பிளேட் முறையில் விரைவில் மாற்றம் !! போலீசாரின் அதிரடி நடவடிக்கை ஏன் ?
தமிழகம் முழுவதும் விரைவில் பழைய மற்றும் புதிய ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

" சாமானிய மக்களின் ஆட்டோ பயணம் "
ஆட்டோக்கள் உள்ளூர் பயணங்களின் முதுகெலும்பாக விளங்குகின்றன. மீட்டர் முறை மீறல் , அதிகக் கட்டணம் , சாகசச் செயல்கள் ஆகியவை சில இடங்களில் எதிர்மறையான ஆட்டோ கலாச்சாரத்தை ஏற்படுத்தினாலும் , சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இதுவே விரைவான மற்றும் எளிய போக்குவரத்துச் சாதனமாகத் தொடர்கிறது.
சென்னையின் பிரதான போக்குவரத்து சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி , ஒவ்வொரு வாகனமும் தெளிவாகக் காணக் கூடிய வகையில் பதிவு எண்ணை காட்சிப்படுத்த வேண்டும்.
இது விபத்து அல்லது குற்றச் சம்பவங்களின் போது வாகனத்தை அடையாளம் காண மிகவும் முக்கிய மானதாகும். ஆனால் நம்பர் பிளேட் இல்லாமல் ஏராளமான ஆட்டோக்கள் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டிக் கொண்டு மாநகரத்தில் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் எளிதில் பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
வாகனப் பதிவெண் தொடர்பாக போக்குவரத்துத் துறை காவல் அதிகாரி கூறும் போது ;
கட்டுப்பாட்டை மீறி வேகமாக செல்லுதல் , அனுமதியில்லாத இடங்களில் வாகனத்தை நிறுத்துதல் , சாலை விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. ஆர்.டி.ஓ மூலமாக கொடுக்கப்பட்ட ஐஎன்டி , ஹோலோகிராம் , ஸ்டிக்கர் கொண்ட நம்பர் பிளேட்டை அகற்றி விட்டு சாதாரண ஸ்டிக்கர் ஒட்டுவதால் உடனடியாக அந்த ஆட்டோக்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆனால் , போதிய அளவில் ஆட்டோக்களுக்கு நம்பர் பிளேட் தரப்படவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது.
இது குறித்து ஆட்டோ தொழிற் சங்கப் பிரிவு நிர்வாகி கூறுகையில் ;
சென்னையில் ஓடும் 1.20 லட்சம் ஆட்டோக்களில் 75% பழைய ஆட்டோக்கள்தான். தற்போது வரை பழைய ஆட்டோக்களுக்கு நம்பர் பிளேட் வழங்கப்படவில்லை.
யாரோ ஒரு சிலர் மட்டுமே குற்றச் சம்பங்களில் ஈடுபடுகின்றனர். எங்களின் பிரதான கோரிக்கையே பழைய வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் வழங்கப்பட வேண்டும். பர்மிட் , ஆவணங்கள் உரிமம் பெறுவது உள்ளிட்டவற்றில் காலதாமதத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர் தரப்பு புகார் குறித்து போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரி கூறும் போது
விதிமுறைகளை மீறி இயக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பழைய மற்றும் புதிய ஆட்டோக்கள் அனைத்துக்கும் விரைவில் தமிழகம் முழுவதும் பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க டெண்டர் விட திட்டமிட்டுள்ளோம்.
மேலும் போக்குவரத்து ஆணையரகம் தரப்பில் 22 வாகன சோதனைச் சாவடிகளில் ஹை-டெக் கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடைபெறுகின்றன எனக் கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















