மேலும் அறிய
புயல் ஓய்ந்த பிறகும் சென்னையில் மழை வெளுத்து வாங்குவது ஏன்.? வானிலை மையம் முக்கிய அப்டேட்
புயல் சின்னத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

chennai rain alert
Source : તસવીર સોશિયલ મીડિયા
தமிழகத்தில் டிட்வா புயல் அலர்ட்
“டிட்வா” புயல் இலங்கையை புரட்டிப்போட்டது. அடுத்தாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரத்தில் சூறைக்காற்றோடு மழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவை விட குறைவான அளவே மழை பதிவானது. அடுத்ததாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் டிட்வா புயலால் மழை கொட்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் சென்னையில் மழை பெய்யாமல் வெயில் மட்டுமே அவ்வப்போது தலைகாட்டியது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை
சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிக்கு மற்றும் அலுவலகத்திற்கு சென்றவர்களும் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னையில் மழை தொடர்வது ஏன் என வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தெற்கிலிருந்து வரும் ஒரு மேற்கத்திய காற்றழுத்த தாழ்வு நிலை டிட்வாவின் புயலுடன் மோதி, ஈரப்பதத்தை வடக்கிலிருந்து அளித்து, அமைப்பின் வடபகுதியில் புதிய மேகக்கூட்டங்களை உருவாக்கி வருகிறது. மையப்பகுதியில் புதிதாக உருவாகும் ஆழமான மேகக்கூட்டங்கள் தொடர்ந்து உருவாகி வருவதால் சென்னையில் மழை கொட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்று மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் , நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும் லைகொண்டுள்ளது. அப்பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோ மீட்டராக இருந்தது.
சென்னைக்கு அருகே புயல் சின்னம்
இது, அடுத்த 12 மணி நேரத்துக்கு, வடதமிழகம் – புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (01-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 22-24° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். நாளை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வட தமிழகம் – புதுவை கடலோரப்பகுதிகள்:
01-12-2025 சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள்:
01-12-2025 சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 02-12-2025 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















