![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
EPS Filed Caveat Petition :ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு கருத்தை கேளுங்கள்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ்!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
![EPS Filed Caveat Petition :ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு கருத்தை கேளுங்கள்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ்! Case related to AIADMK general committee resolutions EPS filed caveat petition in Supreme Court EPS Filed Caveat Petition :ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தால் எங்கள் தரப்பு கருத்தை கேளுங்கள்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/6c33246680bd95b9345ae7231866c2e21693556842516571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க கோரி எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்தும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ்பாபு, ‘‘அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கோ, ஓபிஎஸ் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கோ தடை விதிக்க முடியாது’’ என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், ‘இந்த வழக்குகளில் எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமி தரப்பால் தடுக்க முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக செயல்பட தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
அதேபோல், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ‘ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் கட்சியை விட்டு நீக்கி கடந்த 2022 ஜூலை 11-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், 8 மாதங்களாக மெளனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடைகோர எந்த உரிமையும் இல்லை. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாத நிலையில், தீர்மானங்களின் அடிப்படையிலேயே கட்சி இயங்கி வருகிறது. அதனை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. எனவே தாமதமாக தொடரப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இடைக்கால தடை கோரிய இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஜூன் 28-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தனர். அவர்கள் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்திருந்த அனைத்து இடைக்கால மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
‘அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும். கட்சியில் மனுதாரர்களுக்கு உள்ள உரிமை குறித்து உரிமையியல் வழக்கில்தான் தீர்மானிக்க முடியும்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது பிரதான கோரிக்கை மனு மீதான உரிமையியல் வழக்கின் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிய அனைத்து இடைக்கால கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என்பதால் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக கூறி, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க கோரி எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)