"அரசியலுக்கு வராமல் போக்குக் காட்டியவர்"! ரஜினியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!
அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என 25 வருடங்கள் ரசிகர்களுக்கு போக்கு காட்டி.. கடைசியில் வராமல் போனவர் சொல்கிறார் என கடுமையாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இளைஞர்கள்தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவர்களுக்குதானே காயம் ஆகும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், இளைஞர்களை கவர்ந்து அரசியலுக்கு வருவேன் என ரசிகர்களுக்கு போக்குக்காட்டியவர் என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
ரஜினிகாந்த் பேட்டி:
நீண்ட காலமாக திரைத் துறையில் இருக்கிறீர்கள். சக நடிகராக, ஜனநாயகன் படம் முடக்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு கருத்துக் கூற விரும்பவில்லை என்ற ரஜினி இளைஞர்கள்தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவர்களுக்குதானே காயம் ஆகும்.
படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டும்தான் அவர்களின் சிந்தனை, முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நேரத்தை விட்டுவிட்டால், வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள். அதை மட்டும் அவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்
குடிபோதை, கஞ்சாவுக்கு அடிமை ஆகாதீர்கள்
முதலில் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். இளைஞர்களே, தயவுசெய்து குடிபோதை, கஞ்சா ஆகியவற்றுக்கு அடிமை ஆகாதீர்கள். பிறகு உங்களின் வாழ்க்கையே கெட்டுப் போய்விடும்.
அது உங்களின் தாய், தந்தை, குடும்பத்தையே நரகம் ஆக்கி விடும். அத்தகைய சகவாசம் உள்ள நண்பர்களிடம் அருகே கூடச் செல்லாதீர்கள். அவர்களிடம் இருந்து தூர இருங்கள்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
ரஜினியின் இந்த கருத்துக்கு சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் படங்களில் சிகரெட் பிடித்து இளைஞர்களை கவர்ந்து, அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என 25 வருடங்கள் ரசிகர்களுக்கு போக்கு காட்டி.. கடைசியில் வராமல் போனவர் சொல்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பயணமும் பின் வாங்கலும்:
நடிகர் ரஜினிகாந்தின் நீண்டகால அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு 1996-ம் ஆண்டிலிருந்தே தொடங்கி, 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் அவர் "அரசியலுக்கு வருவது உறுதி" என அறிவித்தபோது உச்சத்தை எட்டியது. அதற்காக 'ரஜினி மக்கள் மன்றம்' தொடங்கி தீவிர களப்பணியாற்றத் திட்டமிட்டவர், 2020-ம் ஆண்டு இறுதிவரை அரசியல் பிரவேசத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வந்தார். இருப்பினும், கட்சியின் தொடக்க விழாவிற்குச் சில நாட்களுக்கு முன்பாக, தனது உடல்நிலை மற்றும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என அவர் எடுத்த திடீர் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், மருத்துவர்களின் கடும் எச்சரிக்கையையும், பிரச்சாரத்தின் போது ரசிகர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்தார். "என் முடிவால் ஏற்படும் வலி எனக்கு மட்டுமே தெரியும்" என உருக்கமாகக் குறிப்பிட்ட அவர், அரசியலுக்கு வராவிட்டாலும் தனது சேவைகளைத் தொடர்ந்து செய்வேன் என உறுதியளித்தார். இத்தனை ஆண்டுகள் ரசிகர்களுக்குக் காத்திருப்பைத் தந்துவிட்டு, கடைசி நேரத்தில் அவர் எடுத்த இந்த முடிவு, மாற்றத்தை எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த நீண்டகால அரசியல் 'போக்குக்காட்டுதல்' மற்றும் அதிலிருந்து அவர் பின்வாங்கிய விதம் ஆகியவைதான், தற்போது ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் அவர் முன்வைக்கும் அறிவுரைகளை விமர்சிப்பதற்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.
























