Annamalai: 'இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது' - அண்ணாமலை காட்டம்
திமுக தொண்டர்கள் என்னை பிரியாணி போட்டு விடுவார்கள் என ஆர்.எஸ். பாரதி சொன்னதாக கேள்விப்பட்டேன். இது அரிவாள் பிடித்த கை. அரிவாளை யார் பிடித்தாலும் வெட்டும். விவசாயி பிடித்தால் நல்லாவே வெட்டும்.
![Annamalai: 'இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது' - அண்ணாமலை காட்டம் Annamalai says that if you want to do politics with fear, it will not happen TNN Annamalai: 'இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது' - அண்ணாமலை காட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/06/6335fd95ab9bab022f8f24da50b135bc1688663725501188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஓ.ரவீந்தரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பை நான் படிக்கவில்லை. அந்த தீர்ப்பை பார்த்த பிறகு பேசுவது தான் சரியாக இருக்கும். அறப்போர் இயக்கம் மின்சார வாரியத்தில் டிரான்ஸ்பார்மர் வாங்கியதில், 397 கோடி ரூபாய் அதிகமாக விலை கொடுத்து வாங்கி உள்ளார்கள் என சொல்லியுள்ளார்கள். திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது. அறப்போர் இயக்கத்தின் ஊழல் புகாருக்கு பாஜக முழுமையாக ஆதரவு தருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பாஜக அளித்த ஊழல் புகார்கள் மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும். இப்பிரச்சனையிலாவது முதலமைச்சர் கவனம் கொடுத்து பார்ப்பாரா? அல்லது செந்தில் பாலாஜி எனக் காப்பாற்ற போகிறாரா?ஆளுநர் மீதான அமைச்சர் ரகுபதியின் குற்றச்சாட்டுக்கு அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். அதில் முழுமையில்லாத விபரங்களை திமுக தந்ததும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். திமுக ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
திமுக தொண்டர்கள் என்னை பிரியாணி போட்டு விடுவார்கள் என ஆர்.எஸ். பாரதி சொன்னதாக கேள்விப்பட்டேன். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கும் வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூத்த அரசியல்வாதியான அவரது பேச்சில் தரம் இருக்க வேண்டும். இது அரிவாள் பிடித்த கை. கிலுவை மரத்தை அரிவாளால் வெட்டும் கை. அரிவாளை யார் பிடித்தாலும் வெட்டத்தான் செய்யும். அதுவும் விவசாயி பிடித்தால் நல்லாவே வெட்டும். ஆர்.எஸ். பாரதி பயமுறுத்தி அரசியல் பண்ணிவிடாலாம் என நினைத்தால், அது என்னிடம் நடக்காது. ஒரு கன்னத்தில் அடித்தால், ஒரு கன்னத்தை காட்டுவதற்காக அரசியலுக்கு வரவில்லை என ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதனை புரிந்து கொள்ள வேண்டும். அவர் தலைகீழாக நின்று தோப்புக்கரணம் போட்டாலும் மூன்றாவது முறையாக 400 எம்.பி.க்களை பெற்று பாஜக ஆட்சிக்கு வரும். மக்கள் நம்பிக்கையை பாஜக கூட்டணி பெற்றுள்ளது.
39 ஜோடி கண்டுபிடித்து தலா ஒரு இலட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். முரளியின் மகன் பாஜகவில் ஒன்றரை ஆண்டுகளாக இருக்கிறார். அவரது திருமணத்திற்கு விருந்தினராக திருமணத்தில் பங்கேற்றேன். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பது குறித்து மக்கள் முடிவு செய்யட்டும். இதில் யாரை போட்டியாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.யாரையும் பாஜக போட்டியாக பார்க்கவில்லை. ஹரி கிருஷ்ணன் அழைத்த திருமணத்திற்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாமலை யாருக்கும் போட்டியில்லை. யாரையும் மிரட்டியோ, பலவீனப்படுத்தியோ பாஜக வளராது. அப்படி வளர்வது நிலையான வளர்ச்சியாக இருக்காது. பாஜகவை பார்த்து யாரும் அச்சப்பட தேவையில்லை.
எலக்ட்ரானிக் ஏற்றுமதியில் நெம்பர் ஒன்றாக வந்ததற்கு மோடியின் பொருளாதார கொள்கையே காரணம். தமிழ்நாடு கொள்கை ஒரு சதவீதம் கூட காரணமில்லை. தென்மாவட்டங்களுக்கு தொழில்களை கொண்டு வராமல் ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். சுப்பிரமணிய சுவாமி ஓல்ட் இந்தியா. அவரை என் வாழ்நாளில் பார்க்க மாட்டேன். அவரது காலில் விழுந்தால் தான் என்னை ஏற்பேன் என்றால், அவரது காலில் விழமாட்டேன். தமிழக பாஜகவிற்கு யாரும் வெளியில் இருந்து சர்டிபிகேட் தர தேவையில்லை. கட்சியின் உழைப்பை கொச்சைப்படுத்துவதை ஏற்க மாட்டேன். அமைச்சர் முத்துசாமி மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர் கோவை வளர்ச்சிக்கு பங்காற்றுவார் என நம்புகிறேன். அனைவரையும் சமமாக நடத்துவார் என நம்புகிறேன்.
நான் தொண்டன். கட்சியில் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள். எனது வேலை ஒருங்கிணைப்பது தான். தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன். தகுதியானவர்கள் டெல்லி செல்வார்கள். சில ஆண்டுகளுக்கு நான் தொண்டனாக பணியாற்றுவேன். யாரை எப்படி பயன்படுத்துவது என தலைமைக்கு தெரியும். தலைமை முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். நடைபயணம் துவங்குவதற்கு முன்பு இரண்டாவது கட்ட ஊழல் பட்டியல் கோவையில் வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளுடன் எந்த பிரச்சனையும் இல்லை. எல்நினோ தாக்கத்தால் பருவ மழை குறையும் என சொல்லப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், காவிரி தண்ணீரை கொண்டு வர வேண்டும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வானதி சீனிவாசன் பேசியதை தவறாக புரிந்து கொண்டு தனிப்பட்ட முறையில் வன்மத்தை கக்குகிறார்கள். திமுகவிற்கு தெரிந்ததே பெண்களை ஆபாசமாக பேசுவது தான். இது குறித்து வானதி சீனிவாசனோ, நானோ, பாஜகவோ கவலைப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)