TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
தவெக-வின் சின்னத்தைப் பார்த்து நாடே வியக்கப்போகிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசியல் கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் கொண்ட நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு இந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
நாடே அஞ்சும் சின்னம்:
உதயசூரியன், இரட்டை இலை என்ற மக்களுக்கு நன்கு அறிமுகமான சின்னத்திற்கு எதிராக வலுவான மற்றும் மக்களை நன்றாக சென்றடையும் சின்னத்தை வசப்படுத்த தவெக ஆர்வம் காட்டி வருகிறது.
ஆட்டோ உள்பட பல முக்கியமான சின்னங்களை தவெக கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், சின்னம் குறித்து ஈரோட்டில் பேசிய செங்கோட்டையன், விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப்போகிறது. ஆணை வரும் வரையில் அதை வெளியில் சொல்லக்கூடாது. சின்னத்தைப் பார்த்த பிறகுதான் நாடே வியக்கப்போகிறது. நாடே அஞ்சப் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தவெக-விற்கு காத்திருக்கும் சவால்:
செங்கோட்டையன் மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் கூறியிருக்கும் சின்னம் எதுவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே மட்டுமே உள்ள நிலையில், தவெக-விற்கு சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
விசிக, காங்கிரஸ் என பலருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையை தவெக முன்னெடுத்தபோதிலும் அவருடன் கூட்டணி கரம் கோர்க்க யாரும் இதுவரை வரவில்லை. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யும், தவெக-வும் ஒரு மாத காலமாக முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.
ஈரோட்டில் பொதுக்கூட்டம்:
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெக-வில் இணைந்தது அக்கட்சியினருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதி தவெக சார்பில் விஜய் தலைமையில் ஈரோட்டில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்த செங்கோட்டையன் முடிவு செய்துள்ளார்.
தவெக-விற்கு இதுவரை ஒரே முகமாக இருப்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரைத் தாண்டி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் என கட்சியில் முக்கிய நிர்வாகி இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைவே ஆகும். செங்கோட்டையன் மட்டுமே மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர் ஆவார். வரும் 9ம் தேதி பாண்டிச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் முதன்முறையாக தவெக மேடையில் செங்கோட்டையன் பங்கேற்கிறார்.
ஆதிக்கம் செலுத்துமா?
சரியான பேச்சாளர் இல்லாமல் தடுமாறி வந்த தவெக-விற்கு பக்கபலமாக தற்போது நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளார். ஆனாலும், அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் கோலோச்சி வரும் திமுக, அதிமுக-விற்கு மாற்றாக அவர்களால் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்பது தேர்தல் முடிவுகளிலே தெரிய வரும்.





















