CM Vijay: தவெகவை வைத்து காய் நகர்த்தும் பாஜக.. வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!
இந்திய அளவில் நீட் போராட்டம் வெடிக்கும் நிலையில் இங்கு காட்சி வேறு மாதிரி இருந்தது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது செய்யப்பட்டபோது தவெக கண்டனம் தெரிவித்து அறிக்கை கூட வெளியிடவில்லை.

தமிழ்நாட்டில் தாங்களால் செய்ய முடியாததை தவெகவை வைத்து பாஜக செய்வதாக விசிக நிர்வாகி ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ள அவர் அதில் பாஜகவையும், தவெக அரசையும் கடுமையாக சாடியுள்ளார். அதில், ‘கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியது தவெக ஆட்சி. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி, நிவாரணம் தர வேண்டியதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அரசு பணி வழங்குவது என்பது இந்த சம்பவத்தில் மட்டுமல்ல, ஏராளமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதற்கு மட்டும் கொடுப்பது அநீதியாகும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் செயற்கை பேரிடராகும்.
சட்டப்படி பணி ஆணை கொடுத்தது செல்லாது என தெரிந்தும் யாரை ஏமாற்ற இப்படி செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. பதவியேற்ற நாளில் அந்த மேடையில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. இன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் 3வதாக அந்த பாடல் பாடப்பட்டது. ஆளுநருடன் அன்று செய்துக் கொண்ட சமரசம் இன்று உரிமையில் கைவைக்கும் அளவுக்கு சென்று விட்டது.
திமுக அன்று செய்திருந்தால் மற்ற கட்சிகள் சும்மா இருந்திருக்க மாட்டோம். இருந்தாலும் அந்த அரசு அவ்வளவு சட்டப்போராட்டம் நடத்தியது. அந்த உறுதி தவெக அரசில் காணாமல் போய் விட்டது. அதிகாரத்தில் நியமனத்திலும் பாஜகவின் முடிவுக்கு ஏற்றவாறு தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
குடியரசுத்தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என திமுகவில் இருந்த கூட்டணி கட்சிகள் தவெகவை ஆதரிக்கிறோம். நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்த பின்னர் அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏ.க்களை உங்கள் பக்கம் திருப்ப தேவை என்ன வந்தது?.. அமமுக எம்.எல்.ஏ.வும் ஆதரவும் கொடுத்துள்ளார். அதிமுக, அமமுகவும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள். இதனை கண்டித்து ஒரு வார்த்தைக் கூட பாஜக பேசவில்லை.
Also Read: Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் தான் வலுப்பெற்று இருந்தது. திமுகவை தவிர மற்ற கட்சிகள் தவெக ஆதரவாக இருந்தாலும் அந்த பெயரில் கூட்டணி வலுப்பெறவில்லை. இந்திய அளவில் நீட் போராட்டம் வெடிக்கும் நிலையில் இங்கு காட்சி வேறு மாதிரி இருந்தது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது செய்யப்பட்டபோது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை கூட வரவில்லை. தவெகவிடம் கேட்டு கேட்டு அறிக்கை வாங்க வேண்டியுள்ளது.
இப்படித்தான் திமுக கூட்டணி இருந்ததா?... பாஜக திட்டமிடும்போதே இங்கிருந்து எதிர்வினை ஆற்றப்படும். தவெக ஆட்சியில் ஒரு விஷயம் நடந்து முடிந்தாலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. முழுக்க முழுக்க பாஜகவால் செய்ய முடியாததை தவெக செய்கிறது. இதை எவ்வளவு நாள் கடந்து போக முடியும், கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? .. இதைப் பொது பிரச்னையாக பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















