BJP Annamalai: மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்து போட்டி.. அறிவித்த அண்ணாமலை
அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் கோளாறுகளை அரசு இரும்புக் கரம் கொண்டு சரி செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நிர்வாகக் கோளாறுகளை அரசு இரும்புக் கரம் கொண்டு சரிசெய்ய வேண்டும்" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவிற்கு சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக் குறைவாக இருந்ததால், ப்ரியா உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஏற்கனவே, உயிரிழந்த ப்ரியா குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மாணவி ப்ரியாவின் மரணத்தை அரசியலாக்காதீர்கள் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மாணவி ப்ரியாவின் உயிரிழப்புக்கு உரிய பதில் வேண்டும், இரு மருத்துவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து கடந்து செல்லக்கூடாது. மாணவி ப்ரியாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? எந்த மாதிரியான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தி இனி இப்படி ஒரு சம்பவம் அரங்கேறாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் விளையாட்டுத்துறையை அலங்கரிக்க வேண்டிய பெண் இன்று உயிரிழந்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பால் விலை உயர்வுக்காக ஈரோட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றுவிட்டதால் அவரால் இன்று இங்கு வர இயலவில்லை. ஆனால் ஒன்றிரண்டு நாட்களில் அண்ணாமலை அவர்கள் மாணவி ப்ரியா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க வருவார் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்திருந்தார்.
மறைந்த கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் நேரில் வருகை தந்தனர். ப்ரியாவின் இல்லத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் அவரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதோடு ப்ரியாவின் குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
”ப்ரியாவின் இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. பல அரசு மருத்துவமனைகள் இன்று இந்த நிலையில் தான் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் உள்ள நிர்வாக கோளாறுகளால் ஏற்படும் பல இறப்புகள் வெளியில் வருவதில்லை. ப்ரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்ததாக ப்ரியாவின் பெற்றோர் தெரிவித்தார்கள்.
தவறான ஒரு சிகிச்சை கொடுத்து அதன் மூலமாக காளை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அரசு என்னதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னால் கூட சகோதரி ப்ரியாவின் இறப்பு ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ப்ரியாவின் இறப்பு துரதிஷ்டவசமானது. ப்ரியாவின் நினைவை பட்டி தொட்டி எங்கும் பத்திரிக்கையாளர்கள் எடுத்து சென்று வருகிறீர்கள்
முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ராமன் விஜயன் தலைமையில் ஐந்து நாட்களில் ப்ரியாவின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து அவரின் பெற்றோர்களை சந்திப்பார்கள். ப்ரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் பத்து பெண்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி பெறுவதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக்கொள்ளும்.
மழைக்காலம் முடிந்தவுடன் ப்ரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகள் நடத்திக் காட்டப் போகிறோம். அந்தப் போட்டிகளுக்கு மதிய விளையாட்டு துறை அமைச்சரை அழைத்து வந்து கௌரவிக்க இருக்கிறோம், அமைச்சர் மா சுப்பிரமணியனின் பேச்சில் உறுதி தன்மை இல்லை . ப்ரியா அவர்களின் இறப்பிற்கு முன்பாக அரசு மருத்துவமனை அவர்களின் கடமையை செய்து இருப்பதாக” சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
ப்ரியாவின் இறப்புக்கு பின்னர் அரசு மருத்துவர்களின் தவறு உள்ளது தெரிந்த பின் சிறு சிறு விஷயங்களை பெரிது படுத்தவேண்டாம் என்று இதே அமைச்சர் கூறுகிறார். முதல்வர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய கொளத்தூர் தொகுதியில் தான் அந்த மருத்துவமனை அமைந்துள்ளது .
10 லட்சம் ரூபாய் பண உதவி, வீடு, வேலை கொடுத்ததால் அனைத்தும் முடிந்து விடாது. முதல்வர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு மருத்துவமனையில் நடந்த தவறை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டு ரத்தம் கொதிக்கிறது என்று கூறி இருந்தார். ப்ரியாவின் மரணத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு பொறுப்பேற்காமல் வாய்ப்பேச்சில் நிவாரண உதவி கொடுக்கிறோம் என்று கூறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலகவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அரசு இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.





















