![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actor Vijay: தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு: தூத்துக்குடி புறப்பட்டார் நடிகர் விஜய்..
தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நடிகர் விஜய் தூத்துக்குடி மாவட்டம் புறப்பட்டுச் சென்றார்.
![Actor Vijay: தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு: தூத்துக்குடி புறப்பட்டார் நடிகர் விஜய்.. Actor Vijay left tuticorin from chennai to provide welfare assistance in Tirunelveli, tuticorin Actor Vijay: தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு: தூத்துக்குடி புறப்பட்டார் நடிகர் விஜய்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/30/13c973b51dc08944054feda8f13e2e901703917285204589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வரலாறு காணத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடப்பதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பலரும் தங்களது வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கான இடமும் இல்லாமல் அடிப்படை வாழ்வாதரத்தை கூட இழந்து தவித்தனர்.
தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, இந்திய ராணுவம், காவல் துறை என பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருடகளையும் அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று நடிகர் விஜய் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக நடிகர் விஜய் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தென் மண்டல பொருப்பாளர் பில்லா ஜகன் தலைமையில், 400 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருக்கும் கேடிசி நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக நடிகர் விஜய் தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி பயணம் மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கேடிசி நகருக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)