சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன் என சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள், வலிமை மிக்க பெண்களை விளம்பரப் பொருட்களாகவோ, காட்சிப் பொருட்களாகவோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அவர் திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியல் ஆக்குவதைத் தகர்க்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார்.
பாரதி ஒரு காலக்கண்ணாடி
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பெருங்கவி பாரதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிறுவனத் தலைவர் தமிழ்ச்செம்மல் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சமூக செயற்பாட்டாளர் பி. காளியம்மாள், “பாரதி ஒரு காலக்கண்ணாடி” என்ற தலைப்பில் விழாப்பேருரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், "பெண்மையும், தமிழும் வேறு வேறு அல்ல. இரண்டும் அழகு, அன்பு, செழுமை நிறைந்தவை. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இவைகளை வேறு வேறாகப் பார்க்காதீர்கள் என்பதே அனைவரின் கனவு. உங்களில் இருந்து வந்தவர்கள்தான் பெண்கள், உங்களுக்காக இருப்பவர்கள் என்று நாம் உணர்ந்துகொண்டாலே அவர்களுக்குச் சம உரிமை கொடுத்ததாக அர்த்தம்" என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள் கூறுகையில்:
பெண்கள் போகப் பொருளாகக் கூடாது
விழா நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த காளியம்மாள், பெண்களின் நிலை குறித்தும் அரசியல் குறித்தும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
பெண்களைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பு
"ஆகப்பெரும் ஆற்றல் படைத்த பெண்களை ஒருசில விளம்பரங்களுக்கு ஒரு காரணப் பொருளாக முன்னிலைப்படுத்தி மாற்றிப் பயன்படுத்துவது ஏற்கவே முடியாத ஒன்று. பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பது, கதைக்குத் தொடர்பில்லாத வகையில் சினிமாக்களில், மதுபானக் கூட்டங்களில் நடனம் ஆட வைப்பது போன்ற இடங்களில் மட்டும் பெண்களைப் பார்க்காதீர்கள். அப்படி ஒரு பார்வையில் பெண்கள் இல்லை. பெண்கள் மிகப்பெரிய திறன் கொண்ட வலிமை மிக்கவர்கள். அவர்களை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்."
பெண் சுதந்திரம்
"பெண் சுதந்திரம் என்று பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நம் வீட்டில் நாம் எப்படிப் பெண்களை நடத்துகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது. ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுகிறார்கள், தங்கள் கனவுகளை மெய்ப்பிக்க அரசியலை மேம்படுத்திக் கொள்ள வருகிறார்கள். ஆனாலும், 'ஒரு பெண் இவ்வளவுதான் செய்ய வேண்டும்' என்ற கட்டுப்பாடாக இருக்கட்டும், இதைத் தாண்டி யோசிக்கக் கூடாது என்ற நிலைப்பாடாக இருக்கட்டும் – இது வீட்டிலிருந்து தொடங்கி நாடு வரை அப்படித்தான் உள்ளது என்ற வலியோடுதான் எங்கள் வார்த்தைகள் வருகிறது."
அரசியல் நிலைப்பாடு
சீமானின் கருத்து: "மொழி அழிந்தால் இனம் அழியும் என்று சீமான் சொல்லியுள்ள கருத்து ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. எனக்கு மொழி சார்ந்த புரிதலை ஏற்படுத்தியவர் சீமான். சரியான கருத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்."
சட்டமன்றத் தேர்தல்: "என்னுடைய அரசியல் பயணம் மக்களுடன் சேர்ந்தே இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். மக்களின் பிரதிநிதியாக நிற்பேன். கட்சி ஆரம்பிப்பது, ஒரு கட்சியில் இணைவது குறித்த முடிவை ஒருநாள் சொல்வேன்."
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது
"நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி ஓராண்டு ஆகியுள்ளது. அதற்கான விடை அவரே சொல்லி இருப்பதாக நான் நம்புகிறேன்.
"திருப்பரங்குன்றம் விவகாரம்:
அரசியல் ஆக்குவதைத் தகர்க்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் பிரச்சனை குறித்துப் பேசிய காளியம்மாள், அதை அரசியல் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
"திருப்பரங்குன்றம் பிரச்சனை வரலாற்று நகர்வுடன் சேர்ந்து கேள்வியும் வருகிறது. 'கந்தனுக்கான மலையா, சிக்கந்தர் மலையா?' என்ற கேள்விக்கு வரலாற்றுத் தேடுதல் இல்லாமல் சொல்ல முடியாது. ஆனால் தற்போதைய சூழலில், மதம் சார்ந்து, ஜாதி சார்ந்து எந்தப் பிரச்சனையும் வராமல் அங்கு வாழும் மக்கள் இணக்கமாக வாழ்கிறோம் என்று சொல்லும்போது, அந்த இடத்தில் பிரச்சனையை உண்டாக்குவதும், அதைச் சார்ந்து நீதிமன்றத்திற்குச் செல்வதும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சொல்வதும், இணக்கமாக இருக்கும் மக்களிடம் ஒரு பிரிவை ஏற்படுத்துகின்ற குதர்க்கமான சூழ்நிலையாக மாற வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்."
"அப்பகுதியில் வாழும் மக்கள், 'எங்களுக்குச் சிக்கல்' என்று சொன்னால் அதற்குத் துணை நில்லுங்கள். 'எனக்குப் பிரச்சனை இல்லை' என்று மக்கள் சொல்லும்போது, அங்கு ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். எல்லா கடவுளும் அன்பைத்தான் போதித்துள்ளபோது, ஏன் இந்தப் பிரிவினை? இதைக் கடவுள் சொன்னதை மறந்து அங்கு பெரிய பிரச்சனை நடப்பதை மக்கள் தான் கவனிக்க வேண்டும். இதை வைத்து அரசியல் ஆக்குவதை முற்றிலுமாகத் தகர்க்க வேண்டும்" என்று காளியம்மாள் திட்டவட்டமாகக் கூறினார்.






















