Tirunelveli: முதல் கணவர் இருக்கும்போதே 2வது கல்யாணம்.. கலவரப்பூமியான புது மாப்பிள்ளை வீடு!
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் சிவந்திபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

திருநெல்வேலி அருகே முதல் கணவன் உயிரோடு இருக்கும்போதே, அவருக்கு தெரியாமல் மனைவி இரண்டாவதாக திருமணம் செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் சிவந்திபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள், 13 வயதில் மகன் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் பணியாற்றியதால் தன்னுடைய இரு குழந்தைகளையும் சிவந்திபுரத்தில் இருக்கும் தனது பெற்றோர்களிடம் விட்டுள்ளார். இப்படியான நிலையில் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அந்த பெண்ணுக்கு ஓராண்டுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
34 வயதான அந்த நபர் பொறியாளராக உள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரிடம் இந்த பெண் தனக்கு 30 வயது தான் ஆகிறது. இன்னும் திருமணமாகவில்லை என கூறி பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தன்னுடைய காதல் விவகாரத்தை அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அவர்களிடம் அந்த இளைஞரும் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றார். கடந்த நவம்பர் 30ம் தேதி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் பெயரளவுக்கு மட்டுமே மணமகள் வீட்டு சார்பில் ஆட்கள் வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்தனர்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் முதல் கணவன் நியாயம் கேட்க அந்த பெண்ணின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அந்த இளைஞனின் வீட்டுக்கு உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது கைகலப்பு ஏற்பட்ட 2வது மாப்பிள்ளை தாக்கப்பட்டார். என்னவென்று அந்த இளைஞரின் உறவினர்கள் விசாரிக்கையில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விவரத்தை அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பரமத்தி வேலூருக்கு பயணப்பட்ட அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறினர். திருமணத்திற்காக அணிவித்த 5 சவரன் தாலி சங்கிலியை மாப்பிள்ளைப் பெற்றுக் கொண்டார். அப்பெண்ணுக்காக ரூ.5 லட்சம் வரை இதுவரை செலவு செய்தேன். இப்போது ஏமாந்து விட்டேன். எனக்கு இனிமேல் அவள் வேண்டாம் என உறவினர்களுடன் அந்த இளைஞர் புறப்பட்டுச் சென்றார்.
என்னை ஏமாற்றி விட்டு இரண்டாவது திருமணம் செய்த இவள் எனக்கு வேண்டாம் என அப்பெண்ணை முதல் கணவர் உதறி தள்ளினார். குழந்தைகளையும் போலீசில் ஒப்படைத்து விட்டு சென்றார், இதனையடுத்து அப்பெண்ணை எச்சரித்து குழந்தைகளுடன் போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















