தூத்துக்குடி அருகே சோகம்.. நேருக்கு நேர் மோதிய வேன் - பைக்.. 5 பேர் உயிரிழப்பு!
நேற்று விடுமுறை நாள் என்பதால் குருசாமி தனது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருடன் பைக்கில் பயணித்த நிலையில் எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் அமைந்துள்ள பல்லாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். குருசாமி திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்குள்ள குளத்தூர் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தார். மேலும் குழந்தைகளை பராமரிக்க மாத சம்பளம் அடிப்படையில் பெண் ஒருவரையும் குருசாமி பணியமர்த்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் குருசாமி தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான முகிலரசன், சுமித்ரன் தனது சகோதரி முத்துலட்சுமி மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகியோரை ஒரே பைக்கில் அழைத்துக் கொண்டு விளாத்திக்குளத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் மாலையில் 5 பேரும் குளத்தூர் நோக்கி புறப்பட்டனர்.
இவர்கள் பயணித்த பைக் கிழக்கு கடற்கரை சாலையில் விளாத்திக்குளம் அருகே உள்ள வைப்பார் பகுதியில் சென்றபோது எதிர்ப்பக்கமாக சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த வேன் திடீரென குருசாமி ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பைக்கில் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் குருசாமி, சுமித்ரன், முகிலரசன், முத்துலட்சுமி, வேலைக்கார பெண் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த வைப்பாறு போலீசார் உயிரிழந்தவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் நடைபெற்ற விபத்து
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள புனே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பை தாண்டி எதிர்திசைக்கு சென்றது. அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து ஹூப்பள்ளி நோக்கி சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அப்பளம் போல நொறுங்கிய காரில் இந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பஸ்ஸில் பயணித்த 43 பயணிகளும் உயிர் தப்பினர். அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. காரில் பயணித்த துர்கா பிரசாத், கேசவ், லலித், ஹர்ஷித், தனுஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இரவு வாகன போக்குவரத்து நெருக்கடி குறைவாக இருந்ததால் காரை வேகமாக ஓட்டி வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.























