![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்... 300 ரூபாயில் ஏற்காட்டிற்கு பேக்கேஜ் பஸ் - முழு விவரம் இதோ
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேக்கேஜ் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்... 300 ரூபாயில் ஏற்காட்டிற்கு பேக்கேஜ் பஸ் - முழு விவரம் இதோ Salem news Package special bus to Yercaud at Rs 300 Full Details Here - TNN சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்... 300 ரூபாயில் ஏற்காட்டிற்கு பேக்கேஜ் பஸ் - முழு விவரம் இதோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/131c954765ae0f927d06aa75a0a1e6b11716205598430113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 47 வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை 22.05.2024, நாளை மறுநாள் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
சிறப்பு பேருந்துகள்
அந்த வகையில், கோடை விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் சார்பில் பொது மக்களின் வசதிக்காக தினசரி சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு இயக்கப்படும் 12 பேருந்துகளுடன் கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான ஏற்காடு ஏரி, பகோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மூன்று சிறப்பு பேருந்துகள் கோடை விழாவை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பேருந்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை விழா நடைபெறும் நாட்களான 22.05.2024 முதல் 26.05.2024 வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சிறப்பு பேருந்துக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)