Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: காவிரி வெள்ளப்பெருக்கு எதிரொலி! இன்றைய நிலவரம் இதோ
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,756 கனஅடியாக குறைந்துள்ளது, தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.74 டி.எம்.சி.யாக உள்ளது

சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,756 கனஅடியாக சரிந்து தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 93.74 டி.எம்.சி.யாக உள்ளது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நடப்பு ஆண்டில் ஜூன் 29ந்தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ந்தேதி 2வதுமுறையாகவும் ஜூலை 20 ந்தேதி 3வது முறையாகவும் ஜூலை 25ந்தேதி 4வது முறையாகவும் ஆகஸ்ட் 20ம் தேதி 5வது முறையாக மேட்டூர் அணை அடுத்தடுத்து நிரம்பியது. அதன் பிறகு மழை குறைந்த காரணத்தாலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடரந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர் மட்டம் மெல்ல குறையத்தொடங்கியது.
இந்நிலையில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,756 கனஅடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 98,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 1.45 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்துள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லில் நேற்று காலை 1.05 லட்சம் கனஅடியாக சரிந்த நீர்வரத்து.
படிப்படியாக மாலை 4 மணி நிலவரப்படி 57,000 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 36,242 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 1 லட்சத்து 8,529 கனஅடியாக அதிகரித்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு, 1 லட்சத்து 16,683 கனஅடியாக இருந்த நீர்வரத்து, காலை 8 மணிக்கு 1 லட்சத்து 14,098 கனஅடியாக குறைந்தது. மாலை 4 மணி நிலவரப்படி, 40,756 கனஅடியாக குறைந்தது. இதனையடுத்து, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 75,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தடை
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு அணைகளிலும் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்வரத்தால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இந்த ஆண்டில் நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை விநாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து இன்று காலை 10 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகள் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.





















