EPS: "எங்களது நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம்" - எடப்பாடி பழனிசாமி
தொகுதி மறுவரை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்றார். அதிமுக சார்பில் இரண்டு பேர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் கூறினார்.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி, அதிமுக மருத்துவர் அணி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ரத்த தான முகாமில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்ட நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர். முன்னதாக, ரத்த தானம் செய்தவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் காண மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தொகுதி மறுவரை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்றார். அதிமுக சார்பில் இரண்டு பேர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும்,
அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான். சட்டமன்றத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருட்கள், கள்ளசாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசு கண்டு கொள்வதில்லை என்பதால்தான் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் செய்வது வேதனையளிப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். சீமான் வீட்டின் முன்பு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாது என்று கூறிய அவர், காவல்துறையினர் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

