மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மலைவாழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, நீதிபதி ஏதேனும் வழக்கு தொடர்பாக கேட்பார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், வழக்கு சம்பந்தமாக கேட்காமல் சென்றது, மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
![மலைவாழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு Dharmapuri case of physical assualt on tribal womens Judge's in-person inspection in Vachathi village TNN மலைவாழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/7a4f244f4264ff0655d00d34c78fc13b1678004052154113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பாலியல் வன்முறை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்டிருந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களி ல் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களி ல் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள்.
சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக புகார் தெரிவித்த தமிழக வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.
அதேசமயம், சந்தன கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினார்கள். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இது தொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22 ம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகாலம் நடந்துவந்த இந்த வழக்கில் செப்.29, 2011 தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பாலியல் வன்முறையி்ல் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்க்ப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
![மலைவாழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/8df02321593a5673555c512601a76e361678004080904113_original.jpg)
மேலும், நேற்று மார்ச் 4ம் தேதி, சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்திருந்தார். நேற்று காலை தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வாச்சாத்தி மலை கிராமத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான கிராமத்தில் உள்ள ஆல மரம், மாரியம்மன் கோவில், குடிநீர் தொட்டி, ஏரி, அருகில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து கிராமத்தில், ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வருவதையறியாத, கிராம மக்கள் ஆலமரத்தடியில் காத்திருந்தனர். ஆனால், கள ஆய்வை முடித்து விட்டு வந்த நீதிபதி வேல்முருகன் பாதிக்கப்பட்ட கிராம மக்களை சந்தித்து பேசினார். அப்பொழுது வழக்குகள் தொடர்பாக எதையும் அவர்களிடம் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதா என கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து தனது ஆய்வை முடித்துக் கொண்டு கிளம்பினார்.
![மலைவாழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - வாச்சாத்தி கிராமத்தில் நீதிபதி நேரில் ஆய்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/05/d4380b50194f9fa81eabe90dc63b9c441678004101900113_original.jpg)
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, நீதிபதி ஏதேனும் வழக்கு தொடர்பாக கேட்பார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், வழக்கு சம்பந்தமாக கேட்காமல் சென்றது, மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் தங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தருமபுரி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட கடுமையான தீர்ப்பை போலவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் வழங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
தொழில்நுட்பம்
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion