மேலும் அறிய
அதிமுக பாஜகவிடம் தனது தனித்தன்மையை இழக்காமல் திராவிட கொள்கையோடு இருக்க வேண்டும் - சிந்தனைச் செல்வன்
தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வழி வகுத்த தலைவர்களில் முதன்மையானவர் காரல் மார்க்ஸ்.

விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன்
அதிமுக பாஜகவிடம் தனது தனித்தன்மையை இழக்காமல் திராவிட கொள்கையோடு, வலுவான எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்பது ஜனநாயக சக்திகளின் விருப்பம் என தருமபுரியில் விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் பேட்டியளித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற குழு தலைவருமான மா.சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ தருமபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிந்தனைச் செல்வன், “தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சி செய்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கான அறுவடையை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். எதிரணியில் இருப்பவர்கள் தங்களது வைப்புத் தொகையை பாதுகாத்துக் கொள்ளவே இந்த தேர்தலில் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டு அரசியலின் மரபிலிருந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகள் ஆகிய பொது தன்மைகளுக்கு எதிராக பாஜக மிகவும் கீழ்த்தரமாக தமிழக அரசியலை மிகவும் தரம் தாழ்ந்து, அநாகரீகமான களமாக மாற்றி வருகிறது. அரசியல் தலைவர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்வது. மேலும் விமர்சனம் செய்வதில்லாமல் பல தருணங்களில் கொலை போன்ற வன்முறைகளை ஊக்குவிபாபதை வழக்கமாக கொண்டுள்ளது. பாஜகவின் இந்த வன்முறை அரசியலை கண்டித்து வருகிற 28ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவி, தமிழ்நாட்டின் மீது ஒரு பண்பாட்டுக் கருத்தியல் தாக்குதல்களை நடத்தி வருகிறார். ஆர் எஸ் எஸ்-சின் கொள்கை பரப்புச் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு வருவது மிகுந்த வேதனை உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வழி வகுத்த தலைவர்களில் முதன்மையானவர் காரல் மார்க்ஸ். தொடர்ந்து தமிழகத்தின் மீதும் பொதுவுடமைவாதிகள் மீதும், வெறுப்புணர்வை கக்கி வரும் ஆளுநர் ரவி உடனடியாக ஆளுநர் பதவியை விட்டு விலக வேண்டும்.
அதிமுக, திமுக கட்சிகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருந்து வந்தனர். இது கடந்த கால வரலாறு. ஆனால் அதிமுக தனது தனித்தன்மையை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிறது. இன்று தமிழ்நாட்டிற்கு எதிரான குரல், சட்டமன்றம் உள்ளிட்ட பல்வேறு திசைகளில் இருந்து வருகின்ற பொழுதும், தமிழ்நாட்டின் பெயரையே மாற்ற வேண்டும் என்ற சூழல் வந்த போது கூட, அதிமுக வாய் திறக்காமல் இருந்தது வேதனையாக உள்ளது. எனவே அதிமுக தனது தனித்தன்மையை இழக்காமல், வலுவான, ஜனநாயக பூர்வமான அரசியல் கட்சியாகவும், ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பு. ஆனால் பாஜக, அதிமுகவில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி அதனை பயன்படுத்த முயற்சிக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் அதிமுக, தனது தனித்தன்மையோடு வலுவான எதிர்க்கட்சியாக திராவிட கருத்தியல் கொண்ட கட்சியாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பல ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பறிபோய் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை கொள்கை குறிப்பேட்டின்படி 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியபட்டு இருக்கின்றன. மேலும் மீதமுள்ள நிலங்கள் எவ்வாறு கண்டறியப்படுவது, கண்டறியப்பட்ட நிலங்களை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்ற கேள்வி எழுகிறது. எனவே அதிகாரம் மிக்க ஒரு நிலம் மீட்பு ஆணையத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு கோரிக்கைகளாக நிறைவேற்றி வரும் தமிழக அரசு பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான அதிகாரம் மிகுந்த நில மீட்பு ஆணையத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















