C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
'டெல்டாவில் கூட்டம் நடத்த வாய்ப்பு கொடுத்தால், எங்கள் பலம் என்ன என்பதை அங்கு மெயின் பிக்ஷராக காட்டுகிறோம்’

அதிமுக என்ற மாபெரும் திராவிட இயக்கத்தின் ஜாம்பவனாக, முக்கிய தளகர்த்தராக இருந்து செயல்பட்டவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அவருடைய சொந்த தொகுதியான விராலிமலையில் அவருக்கென தனி செல்வாக்கு இப்போதும் இருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இரு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக இருந்தாலும், புதுக்கோட்டையை பொறுத்தவரை எப்போது அமைச்சர் என்றால் அது சி.விஜயபாஸ்கர்தான். அப்படியான மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவரிடமிருந்தே கட்சி பொறுப்பை பறித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால், கோபமடைந்த அவர் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி இன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அந்த கட்சியில் இணைந்திருக்கிறார்.
புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்ட பெரும் படை
இதற்காக கடந்த இரண்டு நாட்களாக புதுக்கோட்டையில் இருந்து பஸ், வேன், கார்களில் சாரை, சாரையாக அதிமுக தொண்டர்கள் வரவழைக்கப்பட்டு மகாபலிபுரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்று காலை முதல் அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலுக்கு வர வழைக்கப்பட்டு, இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
மற்ற தலைவர்களை காட்டிலும் விஜயபாஸ்கர் காட்டிய கெத்து
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, வெல்லமண்டி நடராஜன் போன்றவர்கள் தவெக-வில் இணைந்தவர்கள். அவர்கள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக இணைக்கப்பட்டு, பெரிய ஆரவாரம் இல்லாமல் சென்று சேர்ந்தனர். கடம்பூர் ராஜூ கட்சியில் சேரும்போதெல்லாம், பனையூர் அலுவலகத்தில் அவரை நசுக்கு நாறாய் பிழிந்த பின்னரே உள்ளே அனுப்பினர். ஆனால், இதையெல்லாம் கணக்கு செய்த விஜயபாஸ்கர், தன்னுடைய இணைப்பு பெரிய அளவில் பேசுபொருளாகவேண்டும், அதே நேரத்தில் தனக்கான மரியாதை குறையாமல் இணைப்பு விழா நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதனை இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார்.
விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு
இணைப்பு விழாவில் பேசிய சி.விஜயபாஸ்கர், விஜயை வானளவு புகழந்து பேசினார். சந்தித்த முதல் தேர்தலிலேயே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் என்றும் அண்டை மாநிலங்களை அதிர வைத்த மக்கள் விரும்பிய சக்தி என்றும் பேசினார். தமிழ்நாடு அரசியலில் விஜய் சத்தமின்றி சாதனை படைத்துள்ளதாகவும், தமிழக மக்களை நெஞ்சில் குடி வைத்திருக்கும் மகத்தான் தலைவரின் கட்சியில் இன்று எங்களை இணைத்துக்கொண்டிருக்கிறோம் என்று பேசிய அவர், தொண்டர்களை தோழர்களாக அரவணைக்கிற ஒரு லீடரை நாம் தலைவராக பெற்றிருக்கிறோம் என்றும் பேசினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இனி வரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக வெற்றி பெறும் என்றும் அதற்காக உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் பேசியுள்ள விஜயபாஸ்கர், கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் பயணித்து இன்று புதுக்கோட்டையும், தஞ்சையும், நாகையும், திருச்சியும் ஏன் கரூரும் இங்கு வந்திருக்கிறது. இது வெறும் ட்ரெயலர்தான். மெயின் பிக்ஷரை நடத்த கட்சி தலைமை அனுமதி கொடுத்தால் எங்கள் பலம் என்ன என்பதை டெல்டா மாவட்டத்தில் காட்டுவோம் என்று விஜயபாஸ்கர் பேசியதும் அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. அவரது ஆதரவாளர்கள் எழுந்து நின்று விஜயபாஸ்கருக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















