விழுப்புரம் (வ) திமுகவில் அதிருப்தி; ஆளுங்கட்சியாக இருந்து என்ன செய்தீர்கள்? ரவுண்டு கட்டும் கிளை செயலாளர்கள்!
உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருப்பவர்களிடம், 'ஏன் உறுப்பினர் சேர்க்கை குறைவாக இருக்கிறது' என கேட்டால், 'ஆளுங்கட்சியாக இருந்தும் எனக்கு என்ன செய்தீர்கள்' என எதிர்கேள்வி வருகிறது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் கிளை நிர்வாகிகளின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத நிலையில் ஆளுங்கட்சியாக இருந்தும் எனக்கு என்ன செய்தீர்கள்? என்று எதிர்த்து கேள்வி கேட்கும் கிளை செயலாளர்களால் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க வில் உறுப்பினர் சேர்க்கை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு - எதிர்த்து கேள்வி கேட்க்கும் கிளை செயலாளர்கள்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் கிளை நிர்வாகிகளின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத நிலையில், ஓரணியில் தமிழ்நாடு பெயரில் நடக்கும் திமுக., உறுப்பினர் சேர்க்கை மந்தமானது. வரும் சட்டமன்ற தேர்தலில், மீண்டும் திமுக ஆட்சியை பிடிக்கும் வகையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாமை, கடந்த மாதம் 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதன்படி தமிழகம் முழுதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி டிஜிட்டல் முகவர்கள் மூலம், குறைந்தது 40 சதவீத உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உறுப்பினர் சேர்க்கையில், பழைய உறுப்பினர்கள் மற்றும் வார்டில் உள்ள பொதுமக்கள் என அனைவரையும் திமுக வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை, கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று தீவிரமாக சேர்க்கை பணி நடைபெற்றது. ஆனால், நகரம், ஒன்றியம், பேரூராட்சிகளில் பல பகுதிகளில் குறைந்தது 40 சதவீத உறுப்பினர்கள் கூட சேர்க்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக உறுப்பினர் சேர்க்கை கால கெடுவிற்குள் முடிக்காததால், தற்போது வரும் 15ம் தேதிவரை உறுப்பினர் சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் உள்ளாட்சிகளில் நகர மன்ற தலைவர், ஒன்றிய சேர்மன், துணைச் சேர்மன், கவுன்சிலர்கள என பதவியில் இருப்பவர்கள் பணம் சம்பாதித்து விட்டனர். இவர்கள் கூடுதல் செலவு செய்து, 40 சதவீதத்திற்கு மேல் உறுப்பினர் சேர்க்கையை பூர்த்தி செய்து, கட்சியில் நல்ல பெயர் எடுத்து விட்டனர். அடிமட்டத்தில் உள்ள கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த 4 ஆண்டு ஆட்சியில் இதுவரை சம்பாதிக்க முடியவில்லை. இதுபோன்ற நபர்களை கட்சி மேலிடம் முற்றிலும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கிளை நிர்வாகிகள் பெரும் பகுதியினர் உறுப்பினர் சேர்க்கையில் போதுமான ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி விட்டனர். இதன் காரணமாக பல வார்டுகளில் உறுப்பினர்கள் சேர்க்கை பணியை துவங்க கூட முடியாத நிலை தான் உள்ளது.
ஆளுங்கட்சியாக இருந்தும் எனக்கு என்ன செய்தீர்கள்!
திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர் சேர்க்கையில் மந்தமாக இருப்பவர்களிடம், 'ஏன் உறுப்பினர் சேர்க்கை குறைவாக இருக்கிறது' என கேட்டால், 'ஆளுங்கட்சியாக இருந்தும் எனக்கு என்ன செய்தீர்கள்' என எதிர்கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர்.
இந்த ஆட்சியில் ஆளுங்கட்சியாக திமுக இருந்தும், பெரும்பாலான ஒப்பந்த பணிகள் எதிர்க்கட்சியான அதிமுகவினருக்கு ஒதுக்கப்படுவதாக, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். கட்சி தலைமை கீழ்மட்டத்தில் உள்ள கிளைச் செயலாளர்களின் மனநிலையை புரிந்து, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்தால்தான், திமுகவின் உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் இருக்கும்.
இந்த பிரச்னையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பன்னீர்செல்வம் கவனம் செலுத்தி, அடிமட்ட தொண்டர்களின் நியாயமான கோரிக்கையை நிவர்த்தி செய்ய வேண்டும் என கட்சியில் கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் செஞ்சி மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





















