Arun IPS : ‘திமுக மாஜிக்களுக்கு குறி’ அருணை வைத்தே ஆப்பு வைக்கும் முதல்வர் விஜய்..!
'ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற அமைச்சர்களின் ஊழல் தொடர்பான விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்து வருவதால் திமுக மாஜிக்கள் அதிர்ச்சி’

கடந்த ஆட்சியில் அமைதியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியிருகிறது. பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட பல அரசு அலுவலங்களில் அதிரடி ரெய்டு சென்று லட்சக் கணக்கான பணத்தையும் லஞ்சம் பெற்ற ஊழியர்களையும் கைது செய்து அதிரடி காட்டி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்த அதிகாரியான அருண் ஐபிஎஸ்தான்.
அருணுக்கு எதிர்ந்த எதிர்ப்பு
திமுக ஆட்சியில் தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் என்ற முக்கிய பதவிகளை பெற்று, திமுகவிற்கு சாதகமான நபராக அறியப்பட்ட அருணை, தவெக ஆட்சியில் ஓரங்கட்டி வைக்க வேண்டும் என்ற குரல்கள் தொடக்கத்தில் ஒலிக்கத் தொடங்கின. விஜய் சென்னையில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்த நிலையில், அவரை சென்னை காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வரை அப்போது புகார் அளித்தது தமிழக வெற்றிக் கழகம்.
திறமையான அதிகாரிகளை பயன்படுத்த முடிவு செய்த முதல்வர் விஜய்
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியை தவெக பிடித்த நிலையில், அதிகாரிகளை பழிவாங்கும் வழக்கமான படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதல்வர் விஜய். திறமையான, தகுதியான அதிகாரிகள் கடந்த கால திமுக ஆட்சியில் அவர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டிருந்தாலும் அவர்களை முக்கிய பதவியில் அமர்த்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், கடந்த திமுக ஆட்சியின் அதிகாரிகளாக அறியப்பட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தம், அமுதா ஐ.ஏ.எஸ், உதயசந்திரன் உள்ளிட்டோரை முற்றிலும் ஓரங்கட்டி வைக்காமல், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார் முதல்வர் விஜய். அதேபோல, ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டத்திலும் டிஜிபிக்கள் சந்தீப் ராய் ரத்தோர், வெங்கட்ராமன், ஐ.ஜிக்கள் அஸ்ரா கார்க், சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது அருண் ஐபிஎஸ் நியமனம். அருணுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கக் கூடாது என்ற தவெகவினரின் எதிர்ப்பு குரல்களையும் மீறி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருணை நியமித்தார் விஜய்.
முள்ளை முள்ளால் எடுக்கும் முதல்வர் விஜய்
கண்டிப்புக்கு பெயர்போன, திறமையான அதிகாரியான அருணை பழிவாங்காமல், அவருக்கு முக்கிய பதவி கொடுத்த முதல்வர் விஜயின் செயல்பாடு பரவலாக பாராட்டப்பட்டது. அதே நேரத்தில், அருணை வைத்தே திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி கொடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அடுத்தடுத்து வழக்குகளை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் திமுக சார்பு அதிகாரி என்ற பிம்பத்தில் இருந்த அருணை வைத்தே முதல்வர் விஜய் திமுகவினருக்கு கட்டம் கட்டியிருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வைத்திலிங்கம் மீதான வழக்கு மீண்டும் விசாரணை
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வீடு கட்ட தனியார் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையில் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் திமுகவில் இணைந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, வைத்திலிங்கம் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை மீண்டும் விசாரிக்க அருண் ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஜி அமைச்சர்களுக்கு குறி – கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்
வைத்திலிங்கம் மட்டுமின்றி கடந்த ஆட்சியில் முக்கிய துறைகளை வைத்திருந்த செந்தில்பாலாஜி, சேகர்பாபு, ஏ.வ.வேலு, சக்கரபாணி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் மீதும் ஊழல் புகார்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மீது தவெக ஆட்சியில் ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்ற திமுக மாஜிக்களும் தங்கள் மீது எப்போது வேண்டுமானலும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















