வைகோவின் திடீர் பல்டி: விஜய்க்கு பாராட்டு மழை, திமுகவை ஊழல் பெருச்சாளி என சாடல்!
தமிழகத்தில் தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார்” - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

புதுச்சேரி: “தமிழகத்தில் தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைப் பாராட்டியும், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தும் புதுச்சேரியில் பேட்டியளித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்க வந்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்த போது பல்வேறு அரசியல் அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியின் விரிவான தொகுப்பு பின்வருமாறு:
தமிழுக்கு மகுடம் சூட்டிய புதுச்சேரி!
செய்தியாளர்கள் சந்திப்பில் முதலில் தான் வந்ததற்கான நோக்கம் குறித்துப் பேசிய வைகோ:
புதுச்சேரியில் நடைபெறும் தனித்தமிழ் இயக்க விழாவில் 'முத்தமிழ் போற்றும் மூன்று காண்டங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். பிரெஞ்சு நாடு இன்றும் புதுச்சேரியை மதித்துப் போற்றுகிறது. தமிழுக்கு எப்போதும் புதுச்சேரி மகுடம் சூட்டி அழகு பார்த்துள்ளது" என்று புகழாரம் சூட்டினார்.
திமுக செய்தது பெருச்சாளி ஊழல் – விஜய்க்கு வைகோ பாராட்டு!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு வைகோ மிகவும் அதிரடியான பதிலை அளித்தார்: விஜய் ஆட்சிக்கு வாழ்த்து: "தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, ஒரு நேர்மையான ஆட்சியை விஜய் நடத்தி வருகிறார். அவரது கொற்றம் (ஆட்சி அதிகாரம்) வாழ்க! இப்படியே அவரது கொற்றம் என்றும் நீடிக்கும். திமுக மீது கடும் சாடல்: இதே வேளையில் கடந்த கால திமுக ஆட்சியை சாடிய அவர், "திமுக பெருச்சாளி ஊழல்தான் செய்தது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
கட்சியை விமர்சிப்பது வழக்கமான ஒன்றே!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற கட்சிகளில் நிலவும் உள்விவகாரங்கள், விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது வரலாற்றுச் சான்றுகளுடன் வைகோ விளக்கமளித்தார்:
"இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளிலும் இது போன்ற விமர்சனங்கள் நடப்பது வழக்கமான ஒன்றுதான். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸை வளர்த்தார், ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்ட போது அவர் கட்சியை ஆரம்பித்து விமர்சித்தார். அதேபோல் திலகர், வ.உ.சிதம்பரனார் ஆகியோரும் காங்கிரஸை வளர்த்துவிட்டு பின்னர் விமர்சித்துள்ளனர். எனவே, இது அரசியலில் சாதாரணமாக நடப்பதுதான்.
கரூர் விவகாரம்: அன்று வேறு, இன்று வேறு!
முன்னதாக கரூர் விவகாரத்தில் விஜய்யை "மனசாட்சி இல்லாமல் ஓடி வந்தவர்" என நீங்கள் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வைகோ:
"அன்று அவர் அங்கு போகவில்லை, அதனால் அப்படிச் சொன்னேன். இன்று அவர் போகிறார், எனவே அவருக்கு மனசாட்சி இருக்கிறது என்று சொல்கிறேன்" என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகியது நிம்மதி: துரை வைகோ கூற்றிற்கு ஆதரவு!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது குறித்து, மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ, "கூட்டணியில் இருந்து விலகியது நிம்மதியாக இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு வைகோ அளித்த பதில்:
"திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதால் லட்சக்கணக்கான மதிமுக தொண்டர்கள் எவ்வாறு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களோ, அதே நிம்மதியைத்தான் திருச்சி எம்பி துரை வைகோவும் வெளிப்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அண்மையில் வெளியேறிய நிலையில், திமுகவை 'பெருச்சாளி ஊழல் கட்சி' என வைகோ சாடியிருப்பதும், தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யின் நேர்மையான ஆட்சியைப் பாராட்டியிருப்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















