Vaiko Assets : ‘வைகோ-விடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து’ துரை வைகோவின் ஆசையா இதுதானா..?
தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரை வைகோவுக்கு வந்து விட்டது என நாஞ்சில் சம்பத் தெரிவித்த்துள்ளார்.

சென்னை: வைகோவிற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரை வைகோவுக்கு வந்து விட்டது. அதற்கான முயற்சிகளில் தந்தையும் மகனும் களம் இறங்கிவிட்டார்கள் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் ஆசை வந்துவிட்டது!
மதிமுகவில் தற்போது கருத்துமோதல்கள் மற்றும் சலசலப்பு நிகழ்ந்து வருகிறது. வைகோவிற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த மல்லைசத்யா மீது வைகோவே அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியதை தொடர்ந்து, மல்லை சத்யா மதிமுகவில் நிகழ்ந்து வரும் குழப்பங்கள் பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்.
வைகோவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லை சத்யா வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அதில், மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார் எனக் கூறினார்.
மல்லை சத்யா திமுகவில் இணையக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வைகோ பற்றியும், துரை வைகோ பற்றியும் பொது வெளியில் பேசி வருகிறார் மல்லை சத்யா. அதேசமயம், மதிமுகவில் மல்லை சத்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் மதிமுக நிர்வாகி நாஞ்சில் சம்பத் இந்த விவகாரம் தொடர்பாக பேசுகையில்.,
நாஞ்சில் சம்பத் பேசுகையில், வைகோ, துரை தவிர, மதிமுகவில் உள்ள அனைவரும், என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் தவிர முக்கியமான இடங்களில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல்கள் மதிமுக குறித்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவிடம் மதிமுக விலைபோய் விட்டது. துரை வைகோவுக்கு அதிகார பசி ஆட்டி படைக்கிறது. துரைக்கும், மதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், புத்திரனை வைத்துக் கொண்டு, மொத்த கட்சியையும் குடும்பக் கட்சியாக்கி இருக்கிறார் வைகோ.
கடந்த லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட, கட்சிக்காக காலம் காலமாக உழைத்த, பலரும் காத்திருந்தனர். தங்களில் ஒருவருக்கு அந்த தொகுதியை வைகோ ஒதுக்குவார் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர். ஆனால், வைகோ தொகுதியை தன் மகன் துரைக்கு கொடுத்தார்.
நெருப்பில் கூட படுக்கலாம். வைகோவுடன் யாரும் இருக்க முடியாது
கட்சிக்கு உழைத்தவர்களை விட, மகன் தான் முக்கியம் என முடிவெடுத்து, தொகுதியை ஒதுக்கினார். விளைவு, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, மதிமுக தேய்ந்து விட்டது. வைகோவின் சுயநல செயல்பாடுகளால், மதிமுகவை விட்டு எல்லோரும் வெளியேறி வருகின்றனர். 'நெருப்பில் கூட படுக்கலாம். வைகோவுடன் யாரும் இருக்க முடியாது' என கட்சியினர் முடிவெடுத்து விட்டனர்.
மதிமுக அஸ்தமனமாகி விட்டது
தற்போது மதிமுகவில் இருப்பவர்களை மொத்தமாக இரண்டு மினி பஸ்களில் ஏற்றி விடலாம். மதிமுக அஸ்தமனமாகி விட்டது. அக்கட்சிக்கு முடிவு நெருங்கிவிட்டது. வைகோ தன் மகனுக்காக, கட்சியையே தாரைவார்த்து விட்டார். திருச்சியில் வெற்றி பெற்ற ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை ஆகியோர் மத்திய அமைச்சராகினர். அந்த சென்டிமென்ட்படி, தானும் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை துரைக்கு வந்து விட்டது. அதற்கான முயற்சிகளில் தந்தையும் மகனும் களம் இறங்கி விட்டனர்.
கோவணத்தை இடுப்பில் தான் கட்ட வேண்டும்!
மதிமுகவை இனி மீட்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மதிமுகவுக்கு 12 சீட், ஒரு மத்திய அமைச்சர் பதவி, துணை முதல்வர் பதவி கேட்டு கூட்டணி பேசி முடித்து விட்டனர். ஹிட்லர், சுவஸ்திக் பட்டையை தன் கையில் கட்டியிருப்பார். துரையும் ஒரு ஹிட்லர் தான். அவரும், கட்சிக் கொடியை கைப்பட்டையாக கட்டியுள்ளார். கோவணத்தை இடுப்பில் தான் கட்ட வேண்டும். ஆனால், துரை சட்டையில் கட்டியுள்ளார்.
வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என சொல்கின்றனர். பூமிநாதன் எம்.எல்.ஏ விரைவில் திமுகவிற்கு சென்று விடுவார். மதிமுகவுக்கு வைகோ முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். வைகோவின் தவறான செயல்பாடுகளால், மிச்ச சொச்சமிருக்கும் மதிமுகவினர் அனைவரும் திமுகவை நோக்கிச் சென்று விடுவார்கள் என கூறியுள்ளார்.




















