DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்ஷன் பிளான்
DMK ELECTION PLAN : தமிழகத்தில் விரைவில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் வெற்றி பெற்று திமுகவின் பலத்தை காட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்.

தமிழக தேர்தல் முடிவால் திடீர் திருப்பம்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அந்த கூட்டணியில் இணைந்தது.
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்
இதே போல அதிமுகவில் உள்ள ஒரு பிரிவு எம்எல்ஏக்களும் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என திட்டமிட்டனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், ஒவ்வொரு எம்எல்ஏக்களாக அதிமுகவில் இருந்து விலகி, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
மேலும் முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்த நிலையில், விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு தொகுதியாக திமுக ஆலோசனை
இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியோடு இருந்த திமுக தற்போது தேமுதிக, மநீம, மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் மட்டும் திமுக கூட்டணியில் தற்போது வரை நீடித்து வருகிறது. எனவே இந்த கூட்டணியின் உதவியோடு தேர்தலை வெற்றி பெறுவதற்கான வியூகத்தில் திமுக தலைமை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. அப்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
இதில் மதுராந்தகம் தொகுதியின் திமுக நிர்வாகிகள் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் மதுராந்தகம் தொகுதியில் தற்போது உள்ள நிலவரம், திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என கேட்டறிந்துள்ளார். இதனையடுதுத மற்ற தொகுதிகளின் நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
Before You Go
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
ட்ரெண்டிங் செய்திகள்






















