யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்.! திமுகவா.? தவெகவா.? காலையில் நடந்த பரபரப்பு திருப்பம்
அதிமுக மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் தவெக அல்லது திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு என பணிகளை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தும் வகையில் செயல்பட வேண்டிய எதிர்கட்சியான அதிமுகவில் உட்கட்சி மோதலால் நிர்வாகிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்ற நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்ட போட்டியால் தனித்தனி அணியாக அதிமுக நிர்வாகிகள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஒரு பக்கம் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
தவெகவில் செங்கோட்டையன்.?
இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த செங்கோட்டையன் கடந்த வாரம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் நடிகர் விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் இணைய இருப்பதாகவும், அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனவே செங்கோட்டையன் தவெகவில் இணைவது தொடர்பான தகவல் மேலும் உறுதியானது.
யூ டர்ன் அடித்த செங்கோட்டையன்
இந்த நிலையில் இன்று காலை செங்கோட்டையன் வீட்டின் முன்பு ஏராளமான செய்தியாளர்கள் கூடியிருந்தனர். அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பின் தொடர்ந்து வந்தனர். அப்போது தனது வீட்டில் இருந்து திடீரென வெளியே வந்த செங்கோட்டையன், காரில் புறப்பட்டு வெளியே சென்றார். ஆனால் அடுத்த 10 நிமிடங்களில் யூ டர்ன் அடித்து மீண்டும் வீட்டிற்கே வந்தார். எனவே செங்கோட்டையன் ஏன் வெளியே சென்றார். ஏன் திரும்பி வீட்டிற்கே வந்தார் என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக வெளியான ரகசிய தகவலில், செங்கோட்டையன் வீட்டிற்கு காலையில் அமைச்சர் ஒருவர் சென்றதாகவும், அப்போது செங்கோட்டையனை திமுகவில் இணைய அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் திமுக தலைவர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் செங்கோட்டையன் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தான் வீட்டு வாசலில் காத்திருந்த செய்தியாளர்களை திசை திருப்புவதற்காக செங்கோட்டையன் வெளியே சென்றதாகவும், இதனை்யடுத்து செய்தியாளர்களும் செங்கோட்டையனை பின் தொடர்ந்த நிலையில், செங்கோட்டையன் வீட்டில் இருந்த அமைச்சர் வெளியே சென்றதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில் எனவே செங்கோட்டையன் அடுத்த கட்ட திட்டம் திமுகவா.? தவெகவா என விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.




















