![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Himachal Pradesh: எம்.எல்.ஏக்கள் நீக்கத்துக்கு தடை இல்லை; தலை தப்பிய காங்கிரஸ் மாநில அரசு
Himachal Pradesh Disqualification: ஹிமாச்சல் மாநிலத்தில் 6 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரசு அரசாங்கம் நீடிக்கிறது
![Himachal Pradesh: எம்.எல்.ஏக்கள் நீக்கத்துக்கு தடை இல்லை; தலை தப்பிய காங்கிரஸ் மாநில அரசு SC Refuses Stay Disqualification Of Six Congress MLA From Himachal Pradesh Himachal Pradesh: எம்.எல்.ஏக்கள் நீக்கத்துக்கு தடை இல்லை; தலை தப்பிய காங்கிரஸ் மாநில அரசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/18/92cad43d442ed1515edd02a298b6171b1710771812719572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி தொடர்கிறது.
கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்:
சில நாட்களுக்கு முன்பு, ஹிமாச்சல் மாநிலத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுமட்டுமல்ல, மாநில நிதி அறிக்கை தாக்கல் செய்தபோது கூட, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், கட்சியின் கொறடா உத்தரவை மீறி, எதிராக செயல்பட்டனர். இதனால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் கூடிய விரைவில் ஆட்சியை இழக்கும் என்றும் பேச்சுகள் எழ ஆரம்பித்தது.
ஹிமாச்சல் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 68 எம்எல்ஏக்கள் உள்ளன. அதில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்றது. மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவையும் கொண்டுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சுகு பதவியேற்றபோது, காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான 35 ஐ விட அதிகமாக இருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பாஜக கட்சிக்கு சென்றதாக தகவல் வெளியானது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை எனும் சூழல் உருவானது. இதனால் காங்கிரஸ் அரசாங்கம் கவிழும் என பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன.
தப்பிய காங்கிரஸ் அரசாங்கம்:
இந்நிலையில்தான் புது ட்விஸ்ட் வந்தது. ஹிமாச்சல் மாநில சட்டப்பேரவையின் சபாநாயகர், 6 எம்.எல்.ஏக்களை, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தார். இதனால் 68 எம்.எல்.ஏ-க்கள் 62 எம்.எல்.ஏ-க்களாக குறைந்தது.
இதனால் 32 எண்ணிக்கை பெற்றால் பெரும்பான்மை என்ற நிலை உருவாகியது. மேலும், காங்கிரசுக்கு ஆதரவாக 34 எம்.எல்.ஏக்கள் இருப்பதால், பெரும்பான்மை உடையதாக மாறியது. சபாநாயகரின் தகுதி நீக்கத்தை எதிர்த்து 6 எம்.எல்.ஏக்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்தது.
இதனால், காங்கிரஸ் அரசு ஆட்சி இழப்பதற்கான பிரச்னையிலிருந்து தப்பியுள்ளது. இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)