ராமதாஸ் உடல்நலக் குறைவு: தந்தையின் கடும் விமர்சனம்! பதறி ஓடிய அன்புமணி.. நடந்தது என்ன?
உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்த பாமக தலைவர் அன்புமணி

நேற்று நள்ளிரவு திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாசை சந்தித்து, நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனை வந்திருந்த அன்புமணி ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சி தந்தை மகன் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருக்கக்கூடிய ராமதாஸ் மற்றும் அதன் கட்சியில் தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே, மோதல் போக்கு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இளைஞர் அணி தலைவரை நியமிப்பதில் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
செயல் தலைவராக நியமனம்
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் தந்தை மற்றும் மகன் இருவரும் சமாதானம் அடைந்தனர். இந்தநிலையில் வன்னியர் சங்க மாநாட்டிற்கான பணிகளை அன்புமணி ராமதாஸ் செய்து வந்தபோது, பாமக தலைவர் பதிவிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதாகவும், அவரை நிறுவனரான நானே செயல் தலைவராக நியமித்ததாக ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. தலைவர் பதவியை தானே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
வன்னியர் சங்க மாநாடு
இந்தநிலையில் மே மாதம் வன்னியர் சங்க மாநாடு நடைபெற்ற முடிந்தது. அதன் பிறகும் ராமதாஸ் - அன்புமணி இடையேய்லான பிரச்சனை தீரவில்லை. தொடர்ந்து அன்புமணி ராமதாசை, ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை எதிர்க்கட்சிகள் கூட அன்புமணி மீது வைக்காத விமர்சனங்களை, ராமதாஸ் முன் வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இரு அணிகளாக செயல்பட்ட பாமக
பாட்டாளி மக்கள் கட்சியில் 97 சதவீத மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்புமணி தரப்பாக செயல்பட்டனர். இதனால் கோபமடைந்த ராமதாஸ், தனது ஆதரவாளர்களை மாவட்ட தலைவராகவும் மற்றும் மாவட்ட செயலாளராகவும் நியமித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பும், பொதுக்குழு கூட்டத்தை கூட்டி இருந்தது. இந்தநிலையில் அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொது குழுவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகவும், தங்கள் தரப்பிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவோ தெரிவித்தனர். அதன் பிறகு கட்சியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், ராமதாஸ் அறிவித்தார்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்தநிலையில் நேற்று இரவு பாமக நிறுவனர் ராமதாஸிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், எப்பொழுதும் போல மூணு மாதத்திற்கு ஒருமுறை, மருத்துவ பரிசோதனைக்காக ராமதாஸ் செல்வது வழக்கம். அதேபோன்று சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருப்பதாக தெரிவித்தனர்.
தந்தையை பார்க்க ஓடிச் சென்ற அன்புமணி
ராமதாஸ் அன்புமணியை தொடர்ந்து பல விதமாக விமர்சனம் செய்து வந்தாலும், அன்புமணி ராமதாஸ் மேடைகளில் "மருத்துவர் ராமதாஸ் தான் நம்முடைய குல சாமி"அவரது கனவை நினைவாக்க நாம் பாடுபடுவோம் என்றே தொடர்ந்து பேசி வந்தார். அன்புமணியின் இந்த செயல் பாமகவினர் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தது. அந்தவகையில் தனது தந்தை ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அறிந்த அன்புமணி, உடனடியாக காலையே ராமதாசை சந்திப்பதற்கு அப்போலோ மருத்துவமனையில் விரைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















