மாம்பழம் சின்னம் உறுதி! 2026 தேர்தலில் PMK வியூகம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
"மாம்பழம் சின்னம் தன்னிடம் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்"

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
அன்புமணி ஆலோசனைக் கூட்டம்
இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலுக்கான உத்திகள், கட்சியின் செயல்பாட்டு வேகம், மாற்றுக்கட்சியினரை இணைத்தல், மற்றும் மகளிர் பங்களிப்பு குறித்து அவர் நிர்வாகிகளுக்குப் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
செயல்பாட்டில் வேகம் மற்றும் விரிவான இலக்கு. நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கட்சியின் உழைப்பு வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: "நீங்கள் இப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி அனைவரும் வேகமாகப் பணியாற்ற வேண்டும். நமது இலக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பதுதான்" என்று கூறினார்.
மேலும், கட்சியின் கவனம் 100 தொகுதிகள் என்பதோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். நிர்வாகிகளை நோக்கி, "நீங்கள்தான் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற எண்ணத்துடன் அதற்காகவே வேலை செய்யுங்கள். கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி, கூட்டணி பற்றிய கவலைகளை ஒதுக்கிவிட்டுத் தேர்தல் களப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த நிர்வாகிகளைத் தூண்டினார்.
கட்சி பலப்படுத்துதல் மற்றும் பிரதான இலக்கு
கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தினார். "அங்கிருக்கும் (ராமதாஸ் அணியில்) அனைவரும் வந்துவிட்டார்கள். ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசினால் வந்து விடுகிறார்கள். 100 நாள் பயணத் திட்டத்தில் நிறைய பேர் அங்கிருந்து இங்கு வந்து சேர்ந்து விட்டார்கள்" என்று குறிப்பிட்டார்.
கட்சியின் பிரதான எதிர்ப்பைப் பற்றித் திட்டவட்டமாகப் பேசுகையில், "நூறு நாட்களில் நமக்கு இருந்த ஒரே டார்கெட் தி.மு.க. மட்டும்தான். 100 நாள் நடை பயணத்தில் அதுதான் செய்தேன், நீங்களும் அதுதான் செய்ய வேண்டும்" என்று நிர்வாகிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் மற்றும் சின்னம் உறுதி
கட்சியின் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசினார். "நமக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டார்கள். என்னை கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார்கள். மாம்பழம் சின்னம் நமக்கு ஒதுக்கி விட்டார்கள். தேர்தல் ஆணையம் 'ஏ ஃபார்ம்' மற்றும் 'பி ஃபார்ம்' கையெழுத்து போடா அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள்.
நீதிமன்றம் அல்லது எங்கு சென்றாலும் எதுவும் ஆகப் போவது கிடையாது. அதைப் பற்றியும் நான் பேசவும் வேண்டாம்" என்று உறுதியளித்தார். மேலும், கட்சியின் நிறுவனர் அய்யா ராமதாஸ் அவர்களைப் பற்றி மாற்றுத் தரப்பினர் பேசும் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அங்கு இருப்பவர்கள் தினமும் அய்யா (ராமதாஸ்)பெயரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சுயநலத்திற்காக, திமுகவின் கைக்கூலிகள் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிப் பேச வேண்டாம், நம் வேலைகளைச் செய்வோம்" என்று கூறினார். வரவிருக்கும் தேர்தல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகளிருக்கு முக்கியத்துவம் மற்றும் போராட்ட ஆயத்தங்கள்
வரவிருக்கும் தேர்தலில் கட்சிப் பணிகளில் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசினார். "கட்சியில் வந்திருக்கின்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் தான் ஹீரோ" என்று பாராட்டினார். குறிப்பாக, மகளிர் பங்களிப்பு குறித்துப் பேசியபோது, "நூறு தொகுதிகளிலும் மகளிர்களையும் தொகுதிப் பொறுப்பாளர்களாகப் போட உள்ளேன். பெண்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும். அவர்களைப் பத்திரமாகத் தங்க வைத்துப் பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அவர்கள், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக, அன்புமணியின் தங்கைகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், மாவட்டச் செயலாளர்கள் அதற்கான தேதிகளைச் சீக்கிரமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் மகளிர் வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வரவிருக்கும் டிசம்பர் 17 போராட்டத்திற்கு ஆயத்தமாகும் விதமாக, ஒவ்வொரு வருவாய் மாவட்டமாகத் தான் வர இருப்பதாகவும், அதற்காகத் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுக்க வேண்டும் என்றும், திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
இறுதியாக, அன்புமணி ராமதாஸ், "நிம்மதியாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன், தைரியமாக இருக்கிறேன், தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறி, கட்சிப் பயணத்தின் மீதான தனது உறுதியை நிர்வாகிகளுக்கு உணர்த்தினார்.





















