எங்க அம்மா கேட்ட ஒரே கேள்வி தான்.! அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தேன் - குன்னம் ராமச்சந்திரன் கண்ணீர்
என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் இருக்கும் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்ற போகிறாயா என கேட்டார். அசிங்கமாக உள்ளது. இதெல்லாம் ஒரு வேலையாப்பா என எனது மகள் கேட்டார். இதனால் திமுகவில் இணையும் முடிவை திரும்ப்பெற்றதாக குன்னம் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவைவே திரும்பி பார்க்க வைத்த கட்சி அதிமுக, இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக அதிமுகவை 3வது இடத்திற்கு கொண்டு சென்றார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியும் சாதனையும் படைத்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களால் கட்சி பல பிளவுகளை சந்தித்தது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என பிரிந்தது. கட்சி நிர்வாகளும் தனித்தனியாக பிரிந்து சென்றனர். இதனால் வாக்குகள் சிதறி கடந்த 9 ஆண்டுகளில் அதிமுகவிற்கு வெற்றி என்பதே கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விலகல்
இதில் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக எம்எல்ஏக்கள், பல்வேறு மாவட்ட நிர்வாகளும் அதிமுகவில் இருந்து வெளியேறினார்கள். இதில் முக்கியமான நபராக இருந்தவர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயன்றும் முடியாத நிலையே ஏற்பட்டது. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் இணைய தயார் எனவும் ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் துரோகிகளுக்கு அதிமுகவில் இடம் இல்லையென எடப்பாடி பழனிசாமி உறுதியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த நிர்வாகிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளுக்கு பல்டி அடிக்க தொடங்கினார்கள்.
திமுகவில் குன்னம் ராமசந்திரன்.?
குறிப்பாக வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தனர். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். இதேபோல முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை குன்னம் ராமச்சந்திரனும் உறுதி செய்திருந்தார். எனவே வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், அவரோடு குன்னம் ராமச்சந்திரனும் இணைவார் என தகவல் வெளியானது. ஆனால் நேற்று திமுகவில் இணையவில்லை. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த குன்னம் ராமச்சந்திரன், திமுகவில் இணைவது குறித்து குடும்பத்தினரிடம் கலந்து பேசினேன்.
அரசியலில் இருந்து விலகுகிறேன்
என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் இருக்கும் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்ற போகிறாயா என கேட்டார். அசிங்கமாக உள்ளது. இதெல்லாம் ஒரு வேலையாப்பா என எனது மகள் கேட்டார். இதனால் கடும் வேதனையடைந்தேன். இரவெல்லாம் என்ன செய்வது என யோசித்தே தூங்கமுடியாமல் உறக்கம் தொலைத்தேன். காலையில் எழுந்ததும் அரசியலே வேண்டாம் என முடிவு செய்து அவர்களிடம் என் முடிவை சொன்னதாக குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.























