தேர்தல் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் - அமைச்சர் சேகர்பாபு
கூட்டணியை பற்றியோ கூட்டணியை எப்படி அரவணைத்து செல்வது பற்றியோ தேர்தலை எப்படி நடத்துவது என்பது பற்றியோ யாரும் பாடம் எடுக்க வேண்டிய அளவுக்கு நாங்கள் இல்லை.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு ஆய்வு செய்தார்.
வியாசர்பாடி அம்பேத்கார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் கட்டப்பட்டு வரும் புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் , எருக்கஞ்சேரியில் முதல்வர் படைப்பகம் , கவியரசு கண்ணதாசன் நகரில் பேருந்து நிலையம், முல்லை நகர் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளையும் வால்டாக் சாலை தண்ணீர் தொட்டி தெரு மற்றும் அண்ணா பிள்ளை தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம் 700 அடுக்குமாடி குடியிருப்புகள் விளையாட்டு திடல் மாநகராட்சி அச்சகம் மற்றும் சமுதாய நலக்கூடம் என ஒருங்கிணைந்த வளாகம் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு ;
திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பின் தமிழக முதலமைச்சர் வடசென்னை வளர்ச்சியில் அவர் கொண்ட அக்கறை காரணமாக அவர் தீட்டிய திட்டம் காரணமாக இன்று வட சென்னை பகுதியா என்று புருவத்தை உயர்த்தி பார்த்தவர்கள் இன்று நெற்றி சுருக்கத்தோடு வட சென்னை இத்தனை வளர்ச்சியோடு இருக்கிறது என்று பார்க்கிறார்கள்.
சென்னை பெருநகர மாநகராட்சி பொதுப் பணித்துறை குடிநீர் வழங்கல் வாரியம் நெடுஞ்சாலைத்துறை நீர்வளத்துறை மின்சாரத்துறை என பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அதில் சிறு பங்களிப்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் செயல்பட்டு வருகிறது.
அம்பேத்கர் கல்லூரி அருகில் உள்ள குளிர்சாதன பேருந்து நிறுத்தம், முல்லை நகர் பேருந்து நிலையம், திருமண மாளிகை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தோம்.
சென்னை புறநகர் பகுதிகளில் 12 திருமண மண்டபங்கள் கட்டப்படுவதாக திட்டம் தீட்டப்பட்டு இரண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
13 - ம் தேதிக்குள் மூன்று திருமண மண்டபம்
கொளத்தூரில் அறிஞர் அண்ணா பெயரிலும், திரு.வி. க நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பெயரிலும் பொருளாதார வசதிகள் உடையவர்கள் தான் இது போன்ற திருமண மண்டபங்களை அடைய முடியும் என்பதை மாற்றி சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் மண்டபங்களை கட்டி வாடகையை குறைத்து தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த மாதம் 13 ஆம் தேதிக்குள் இன்னும் மூன்று திருமண மண்டபங்கள் திறந்து வைக்க உள்ளார்கள்.
அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்குள் இந்த பேருந்து நிறுத்தங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த ஆட்சி முடிய போகிற நிலையில் கணேசபுரம் மேம்பாலம் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பது குறித்த கேள்விக்கு ;
இந்த ஆட்சி முடிவு என்று நீங்கள் கணக்கிடாதீர்கள் இந்த ஆட்சி தொடரும் ஆட்சி. நில எடுப்பின் காரணமாக பணிகள் தொய்வடைந்திருந்தது நம்மோடு எல்லா வகையிலும் ஒத்துழைப்போடு இருக்கும் ஒன்றிய அரசின் ஒத்துழையாமை இயக்கத்தால் இந்த பணிகள் தாமதம் ஆகி உள்ளது.
அந்தப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது எவ்வளவு விரைவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த பணிகள் நடைபெறும் அந்த திறப்பு விழாவிற்கு உண்டான முயற்சி முழு முயற்சியோடு நடைபெறும்.
தைப்பூச திருநாளுக்காக அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு
பக்தர்களுக்கு வருபவர்களுக்கு குடிநீர், மோர் போன்ற வசதிகளுக்கும் திருக்கோவில்களுக்கு அன்னதான நிகழ்வுகளும், வருகிற பக்தர்களுக்கு வரிசைப்படுத்தி இலகுவாக சாமி தரிசனம் செய்வதற்கான முக்கிய திருக் கோயில்களில் சிறப்பு கட்டணங்களை ரத்து செய்திருக்கிறோம்.
துப்புரவு பணிகளுக்கும் கூடுதலான பாதுகாப்பு பணிகளுக்கும் எந்தெந்த திருக்கோவில்களில் அந்த நாட்களில் கூட்டம் குறைவாக இருக்குமோ அங்கிருந்து பணியாளர்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.
பழனி கோவில்களில் கூடுதலாக இணை ஆணையாளர்களை பொறுப்பாளர்களாக நியமித்து கண்காணித்து வருகிறோம். தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தான் தினந்தோறும் 20, 000 நபர்களுக்கு உணவளித்து வருகிறோம். திருவிழாக்களங்களில் ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் பேருக்கு உணவு அளித்து வருகிறோம்.
விழா காலங்களில் ஒரே நேரத்தில் 20,000 பேர் உணவு அருந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகள், பேட்டரி கார் வசதிகள், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பெரிய கோவில்களிலும் காவல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை பெறுவதற்காக அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க இணை ஆணையாளர்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
மருதமலை மலைக்கோவில் அருகே வனப்பகுதி 500 மீட்டர் தொலைவில் முருகன் சிலை வைப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு ,
அனுமதி மறுக்கப்படவில்லை, 500 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரத்தில் மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். அவருக்கு சாத்திய கூறுகள் இருக்கிறதா என்று பார்ப்போம்.
தடைகள் பல வரும் அதை தாண்டி செல்கிறது தான் திராவிட ஆட்சியின் பழக்கம். நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம் உரிய தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். நீதிபதிகள் கருத்துக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்படும்.
நான்கு தலைமையுடன் ( தமிழக முதலமைச்சர் , துணை முதலமைச்சர் மனைவி மற்றும் மருமகன் ) தமிழக அரசியல் செய்யப்பட்டு வருகிறது குடும்ப அரசியல் வாரிசு அரசியலுக்கு முடிவாக இந்த தேர்தல் இருக்கும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு ,
நரேந்திர மோடியை சந்திக்கும் போது ஏன் அவர் தன் மகனை அழைத்து கொண்டு சென்றார்.
திமுக கூட்டணி வலுவாக இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு
கூட்டணிக்கு கூவி கூவி அழைத்தது யார் என்ற உங்களுக்கே தெரியும். நாங்கள் நிலையாக நிற்கிறோம். அண்ணா சொன்னது போல் நாங்கள் ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வைக்கிறோம். தமிழக முதலமைச்சர் அரசியல் ஞானம் பல தேர்தல்களை சந்தித்தவர் 60 ஆண்டு கால அரசியலை பார்த்தவர். எது எப்போது எப்படி நகர்த்த வேண்டும் என்பதை கற்று அறிந்தவர்
கூட்டணியை பற்றியோ கூட்டணியை எப்படி அரவணைத்து செல்வது என்பது பற்றியோ தேர்தலை எப்படி நடத்துவது என்பது பற்றியோ யாரும் பாடம் எடுக்க வேண்டிய அளவுக்கு நாங்கள் இல்லை.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆங்கில தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுடன் பேசும் பொழுது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா , கலைஞர் ஆகியோர் அர்த்தமுள்ள சாதனைகளை செய்துள்ளார்கள் அவர்களை முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறேன் என்று பேசி உள்ளதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு ;
உங்கள் பதிலே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து சென்றார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















