" பால்வாடி குழந்தைக்கு பதில் சொல்ல முடியாது " தவெக - விற்கு அமைச்சர் பி.கே சேகர் பாபு பதில்
பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கண்ட கட்சி பதில் சொல்ல முடியாது. இந்த இயக்கம் ஒரு எஃகு கோட்டை - சேகர்பாபு

முதல்வர் படைப்பகம் - அமைச்சர் ஆய்வு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை திரு.வி.க நகர் , ஓட்டேரி , பெரம்பூர் , ஜமாலியா, மங்களபுரம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி , சென்னை மாநகர மேயர் பிரியா , மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ;
மாண்புமிகு முதல்வர் அவர்கள் 20 - க்கும் மேற்பட்ட திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த திட்டங்கள் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் சிந்தையில் ஔித் திட்ட மகத்தான திட்டம் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்ற மக்கள் வீட்டில் நல்ல சூழல் இல்லாமல் படிப்பதற்கு வசதி இல்லாமல் இருக்கின்ற மாணவச் செல்வங்கள் , வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவு பொருளாதார செலவிலே விழாக்களை நடத்த இயலாத இருக்கின்ற மக்கள், பள்ளிகள் தேவையான அளவு கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்களுடைய படிப்பிலே தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கின்ற சூழல் முழுவதுமாக அகற்றப்பட வேண்டும்.
காந்தி பெயராக இருந்தால் என்ன , ராமர் பெயராக இருந்தால் என்ன மக்கள் பயன்பாட்டில் தானே உள்ளது என சி.வி சண்முகம் கூறியது தொடர்பான கேள்விக்கு ;
அவர் கோட்சே பெயரை வைத்தால் கூட கவலைப்பட மாட்டார், ஒட்டு மொத்தமாக அடிமை சாசனத்தை அமிஷாவிடம் ஒப்படைத்து விட்ட அதிமுக எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. அவர்கள் இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.
திமுக தனித்து நின்றால் 22 சதவீத வாக்கு தான் உள்ளது என ஆதவ் அர்ஜுனா கூறியது தொடர்பான கேள்விக்கு ;
பால்வாடி குழந்தைகளுக்கு பவள விழா கண்ட கட்சி பதில் சொல்ல முடியாது. இந்த இயக்கம் ஒரு எஃகு கோட்டை. ஆட்சி அதிகாரத்தை பற்றி கவலைப்படாத கோட்டை கொள்கை, கோட்பாடுகளாக, லட்சியங்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.
அண்ணா அவர்கள் கூறியதைப் போல் எங்களுக்கு கொள்கை என்பது இடுப்பில் கட்டிய வேட்டி போல் , பதவி என்பது தோளிலே போட்ட துண்டு போல. வேட்டியா ? துண்டா ? என்று வருகின்ற பொழுது கொள்கை சார்ந்த வேட்டி தான் முக்கியம், அவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி அரசியல் களத்தை நான் கலங்கபடுத்த விரும்பவில்லை என தெரிவித்தார்.























