ஓ.பன்னீர்செல்வம் பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் - டிடிவி தினகரன் கடும் தாக்கு..
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் நடைபெற்ற அமமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன், ஓபிஎஸ் தரப்பை 'பசுந்தோல் போர்த்திய புலி' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் செயல்பாடுகள், வரவிருக்கும் தேர்தல் வியூகம் மற்றும் மத்திய அரசின் ஆட்சி நிர்வாகம் குறித்துத் தனது கருத்துக்களை அதிரடியாகப் பகிர்ந்து கொண்டார்.
ஓபிஎஸ் மீது கடும் விமர்சனம்: "பசுந்தோல் போர்த்திய புலி"
சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பேசிய கருத்துக்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன், "ஓ.பன்னீர்செல்வம் இதுவரை பசுந்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. எவ்வளவு வக்கிர மனம், எவ்வளவு குரோத உணர்வு இருந்தால், புரட்சித் தலைவரையும் இதய தெய்வம் அம்மா அவர்களையும், அவர்களது கோடிக்கணக்கான தொண்டர்களையும் இழிவுபடுத்தும் வகையில் அவரது தரப்பு பேசியிருக்கும்? இது எங்களுக்குப் பெரும் வருத்தத்தைத் தருகிறது.
அரசியலில் நிலைத்திருக்க ஓபிஎஸ் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம், அது அவரது விருப்பம். ஆனால், எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் ஆசியுடன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என்று சட்டமன்றத்தில் அவரது ஆசி பெற்றவர் பேசியது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆன்மாவையே காயப்படுத்தும் செயல். இது மிகவும் வேதனைக்கும், வன்மையான கண்டனத்திற்கும் உரியது," என்று சாடினார்.
திமுக என்கிற 'தீய சக்தி' - வரலாற்றைச் சுட்டிக்காட்டிய தினகரன்
திமுகவின் அரசியல் வரலாறு குறித்துப் பேசிய அவர், "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திமுக என்கிற தீய சக்தியை எதிர்த்துதான் தனிக்கட்சியையே தொடங்கினார். அவர் ஆட்சியில் இருந்த 15 ஆண்டுகாலம் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தியவர். அவருக்குப் பின் அம்மா அவர்கள் திமுகவை வலுவாக எதிர்த்த ஒரே அரசியல் சக்தியாகத் திகழ்ந்தார். இப்படிப்பட்ட தலைவர்களின் ஆசி திமுகவிற்கு கிடைக்கும் என்று சொல்வது, அந்தத் தலைவர்களுக்குச் செய்யும் துரோகம்," என்றார்.
தேர்தல் களம்
வரவிருக்கும் தேர்தல் குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய டிடிவி தினகரன், "நடப்புத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை" என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் கூட்டணிக் குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அமைந்துள்ளது. பாஜக தலைமையிலான இந்த என்டிஏ கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கிறத, தற்போதுள்ள கூட்டணி போதுமான பலத்துடன் உள்ளது. மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவை இந்தத் தேர்தலில் நிச்சயம் வீழ்த்துவோம். தமிழகத்தில் மீண்டும் 'அம்மா' அவர்களின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
"கஞ்சா தலைநகராக மாறும் தமிழகம்"
தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பேசிய அவர், "திமுக ஆட்சியில் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கஞ்சா பழக்கம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளி மாணவர்கள் கூட கஞ்சாவைப் பயன்படுத்தும் அளவிற்குச் சமூகம் குட்டிச்சுவராகிவிட்டது. இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் இந்த நிலையை மாற்ற மக்கள் தயாராகிவிட்டனர்," என்று குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவு - காங்கிரஸிற்கு விமர்சனம்
மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய தினகரன், இந்தியாவை உலக நாடுகளுக்கு இணையாக வல்லரசாக மாற்றுவதற்குப் பிரதமர் மோடி கடுமையாக உழைத்து வருகிறார். "உலகில் வளர்ந்த நாடுகளே போட்டி போடும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதற்குப் பிரதமர் மோடியின் நல்லாட்சியே முக்கிய காரணம். ஆனால், ஐநா சபை பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சர்வதேச ஏஐ (AI) மாநாடு போன்ற நிகழ்வுகளில் காங்கிரஸ் கட்சி மிகக் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்கிறது. எதிர்ப்பைப் பதிவு செய்ய எவ்வளவோ வழிகள் இருந்தும், இழிவான செயல்பாடுகளால் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக காங்கிரஸ் மாறிவிட்டது," என்று எள்ளி நகையாடினார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்






















