திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்ட டி.டி.வி.தினகரன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்நாள் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமமுக சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசுகையில், "ஆட்சி பொருப்பில் ஏற்றி விட்டவர்களையே எந்த ஊர் என கேள்வி கேட்டவர்கள், நமக்கு துரோகம் செய்த புல்லுருவிகளை மக்கள் தூக்கி எறிந்து வருகிறார்கள்.

மக்களுக்காக கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என ஒவ்வொரு வீட்டிலும் கல்விக் கண்ணை திறந்து வைத்தவர் தான் அறிஞர் அண்ணா, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற அண்ணாவின் வழியில் ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அம்மா அவர்களும். அண்ணா அவர்கள் உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்த போது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தயவால் முதல்வரானவர் கருணாநிதி.

ஆனால், அவர் நமது கோட்பாடுகளை கைவிட்டு, பட்டி தொட்டி எல்லாம் ஊழலை பெருக்கெடுத்து ஓட வைத்தார். முதல்வரான கருணாநிதி கோபாலபுரத்தையே தனது கட்சி ஆக்கிக் கொண்டார். அடிப்படை தொண்டர்களால் தான் கட்சியின் தலைமை பொறுப்புகள் தேர்ந்தெடுக்க வேண்டும், இப்படி உருவாக்கப்பட்ட கட்சி இன்று வியாபார நிறுவனமாக மாறிவிட்டது. அப்படி தொண்டர்களுக்கான கட்சியில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த பதவியில் தற்போது பழனிச்சாமி இருந்து கொண்டு கட்சியை கபலிகரம் செய்து விட்டார்.

பழனிசாமி கட்சியின் தலைவராக இருக்கும் வரை அதிமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது, அன்று ஆர்கே நகர் தொகுதியில் பழனிசாமி எதிர்த்து குக்கர் சின்னத்தில் நின்று மாபெரும் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு பண பலத்தை பணத்தை வைத்துக் கொண்டும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்னை பார்த்து பழனிசாமி பயப்படுகிறார் என்பதால் நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தீய சக்தி திமுகவையும், துரோக சக்திகளையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கூட நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது. வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும், நம்மை வறுமையில் தள்ளுவதற்கு கர்நாடக அரசு முயல்கிறது, அதற்கு திமுக அரசு துணை போகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியோ, ஏழை எளிய மக்களை பற்றியோ கவலை இல்லை, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பற்றி மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார். அதனால் தான் இதுவரை தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை என்றார்.

மேலும் தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில் இரண்டு கோடி குடும்பங்கள் இருக்கும் பொழுது, தேர்தல் வருகிறது என்ற அவசரத்தில் ஒரு கோடி குடும்பத்திற்கு அவசர கதியில் பணத்தை வழங்கியுள்ளார். அனைத்து குடும்பங்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் தெரிவித்துவிட்டு, பெயர் அளவில் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். திமுகவின் 505 தேர்தல் வாக்குகளில் எதையும் நிறைவேற்றாமல் 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக ஸ்டாலின் கூறி வருகிறார். நீட் தேர்வை நீக்குவோம் என சொன்னார்கள் அதற்கான நடவடிக்கை என்ன என்பதை தெரியவில்லை, சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்கள் அதையும் இதுவரை செய்யவில்லை.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்றார்கள், கொரோனா காலகட்டத்தில் பணியாற்றி செவிலியர்கள் பணி நிரந்தரம் என்றார்கள் இதுபோன்று பல வாக்குறுதிகளை நிறைவேற்றமால், சொல்லாததையும் செய்வோம் என்று கூறியது போல், சொத்து வரியை உயர்த்தி உள்ளனர், மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர், முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர், ஆவின் பால் பொருட்களை உயர்த்தி உள்ளனர். இதில் தான் முதல்வர் ஸ்டாலின் சாதனை செய்துள்ளார். பாஜகவை வைத்து தமிழகத்தில் மிரட்டியே திமுக ஆட்சிக்கு வந்தது. மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை காட்டிய மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர துடிக்கிறது, பழனிச்சாமி கம்பெனிக்கும் திமுகவிற்கும் மாற்று சக்தியாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெரும்” என்றார்.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்























