![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Manipur Violence: மணிப்பூர் வன்கொடுமை.. மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.
![Manipur Violence: மணிப்பூர் வன்கொடுமை.. மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் Manipur Violence DMK women's team protested today in district capitals Manipur Violence: மணிப்பூர் வன்கொடுமை.. மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிர் அணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/24/01f0041a19d063c0f7d5d7d4b469a9381690170404505102_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திமுக சார்பில் நேற்று அதாவது ஜூலை 23ஆம் தேதி திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஏற்கனவே திமுக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “பா.ஜ.க.ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு விதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பாஜக அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.
மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி அவர்கள், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார். 24.07:2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)