DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
Manickam Tagore: தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் திமுகவின் வாக்கு சதவிகிதத்தை பகிர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும் திமுக- காங் மோதல்
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவும் திமுக தலைமையை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்தியது. அப்போது ஆட்சியில் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு 45 தொகுதிகள் தர வேண்டும் என பட்டியலை கொடுத்துள்ளது.இதனால் அதிருப்தி அடைந்த திமுக, கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாமல் அமைதி காத்து வருகிறது.
தவெகவுடன் பேச்சுவார்த்தை
இதற்கிடையே, திமுக - காங்கிரஸ் கட்சி இடையே யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை தொடர்ந்து திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். அதேநேரம் நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கவும் பேச்சுவார்த்தையை ஒரு சிலர் நடத்தினர். இதனால் திமுக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. சமுகவலைதளத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் மோதல் அதிகரித்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து கருத்துகளை கேட்டறிந்து கூட்டணி ஆட்சி தொடர்பாக எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தது. இதனையடுத்து சில வாரங்கள் காங்கிரஸ் கட்சி அமைதி காத்தது. அதேநேரம் மதுரை மாவட்ட திமுக செயலாளர் தளபதி காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 3ஆயிரம் ஓட்டுக்கள் மட்டுமே இருப்பதாக வெளிப்படையாக மேடையில் பேசினார். இதனால் மீண்டும் மோதல் உச்சத்தை தொட்ட நிலையில் திமுக தலைமை தங்களது நிர்வாகிகளை கூட்டணி கட்சிகள் தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என எச்சரித்தது.
புதுச்சேரியிலும் கூட்டணியில் தொடரும் மோதல்
இந்த நிலையில் தான் தமிழகத்தின் அண்டை மாநிலமாக புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு திமுக 6 எம்எல்ஏக்களோடு எதிர்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில், புதுச்சேரியிலும் இழுபறியில் உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திமுக எம்பியும், புதுச்சேரி பொறுப்பாளருமான ஜெகத்ரட்சகன் தலைமையில் புதுச்சேரியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்க திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 6, 2026
இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா்?
ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்?
தொடரும் இந்த முறை
நல்லது இல்ல . https://t.co/zmyCjlM4Vu pic.twitter.com/vIdqyN5kGb
திமுக 8% வாக்குகள்-காங்கிரஸ் 26%
இந்த பரபரப்பான நிலையில் தான் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 26% ஓட்டுக்களும், திமுகவிற்கு 8% ஓட்டுக்கள் பெற்ற பதிவை வெளியிட்டார். மேலும், கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா, இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்ல என தெரிவித்துள்ளார்.























