DMDK assembly elections: 6 சீட்டுக்கு மேல் வாய்ப்பே இல்லை.! கை விரித்த திமுக, அதிமுக- பிரேமலதாவின் அடுத்த திட்டம் என்ன.?
DMDK assembly elections: திமுக மற்றும் அதிமுகவிடம் தனித்தனியாக கூட்டணி தொடர்பாக தேமுதிக பேசி வரும் நிலையில், அதிகபட்சமாக 6 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என இந்த இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளது. எனவே பிரேமலதாவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக-அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க திமுகவும்- அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. அதே நேரம் குறைந்தது 165 முதல் 170 இடங்களில் நேரடியாக போட்டியிட திமுக, அதிமுக திட்டமிட்டுள்ளது. எனவே மீதமுள்ள 55 இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 23 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ் கட்சிக்கு தலா 6 தொகுதியும், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு கட்சிக்கு தலா இரண்டு தொகுதியும் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மீதமுள்ள தொகுதிகளை மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகள் என்ன.?
இதே போல அதிமுகவில் பாமகவிற்கு 15 தொகுதிகள், பாஜகவிற்கு 20 தொகுதிகள், அமமுகவிற்கு 7 முதல் 9 தொகுதிகள், தமாகாவிற்கு 4 தொகுதிகள் என ஒதுக்கப்படவுள்ளது. அதே நேரம் தேமுதிக இன்னும் தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை திமுக- அதிமுக என இரு தரப்பிலும் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது. தேமுதிக தரப்பில் குறைந்தது 15 முதல் 18 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக தரப்பில் 4 முதல் 5 தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே தர முடியும் என தெரிவித்துள்ளது. அதிமுக தரப்பில் இதே போல 6 சட்டமன்ற தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக தெரிவித்துள்ளது.
எனவே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் கொடுக்க முடியும் என இரண்டு கட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்ட நிலையில், இரட்டை இலக்கம் இல்லாமல் கூட்டணிக்கு வர முடியாது என தேமுதிக தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பிறகு திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி கதவு அடைக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.
உரிய மரியாதையும், சீட்டும் கொடுக்கனும்- பிரேமலதா
இந்த நிலையில் தான் தூத்துக்குடியில் நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பேசிய பிரேமலதா, நீங்கள் முதலமைச்சராக உட்கார நாங்கள் உழைக்கிறோம். எனவே அதிமுக, திமுக புரிந்து கொள்ளுங்கள், உரிய மரியாதையும், எங்களுக்கு உரிய சீட்டும் கொடுக்க வேண்டும். நீங்க மட்டும் 170 தொகுதியில் போட்டியிடனும், தனித்து பெரும்பான்மை ஆட்சி அமைக்கனும் என நினைக்கிறீங்க, அப்படி இருக்கும் போது எங்களுக்கும் கூடுதல் தொகுதிகளை கேட்க உரிமை இருக்கிறது.
நீங்க ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், எங்களுக்கு உரிய மரியாதையும், தொகுதியும் கொடுக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு 41 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதில் பலர் சென்றுவிட்டனர். மீதமுள்ளவர் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். எனவே கூட்டணிக்காக நாம் அவசரப்படக்கூடாது. அதற்கு என நேரம் உள்ளது. இவ்வளவு நாள் சத்திரியனாக வாழ்ந்து விட்டோம். இனி சாணக்கியனாக வாழ வேண்டும்.
பிரேமலதாவின் அடுத்த திட்டம் என்ன.?
அவங்க மட்டும் 160 -170 சீட்டில் போட்டியிடுவதாக கூறுகிறார்கள். அதே நேரம் தேமுதிகவிற்கான உரிய மரியாதை கொடுக்க வேண்டும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன். எனவே கட்டாயம் இந்த முறை நீங்கள் விரும்பும் கூட்டணி தான் அமைக்கப்படும் என தொண்டர்களிடம் பிரேமலதா தெரிவித்தார்.
எனவே திமுக - அதிமுக கூட்டணியில் உரிய இடங்கள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவில்லையென்றால் அடுத்த வாய்ப்பு என்ன என்பதை அரசியல் விமர்சகர்கள் ஆராய தொடங்கியுள்ளனர். அந்த வகையில விஜய் தலைமையிலான தவெக அணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.























