C Vijayabaskar Join Tvk: நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
Former Minister C Vijayabaskar ; மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதாக சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் தொடரும் உட்கட்சி மோதல்
சட்டமன்ற தேர்தல் முடிவுவால் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து கட்சி பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் மோதல் அதிகரித்த நிலையில் அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
விராலிமலையின் எம்எல்ஏ
அதிமுக தோல்வி அடைந்தாலும் விராலிமலையின் செல்லப்பிள்ளையாக இருந்த சி.விஜயபாஸ்கர் மட்டும் தனது தொகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர், அதிமுகவில் இருந்தும் விலகினார். இதனையடுத்து நாளை தவெகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது, உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.
நல்லாட்சி புரியும் விஜய்
நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை தவெகவில் இணைகிறேன்
இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஊடக நண்பர்களாகிய தாங்கள் நேரில் கலந்து கொண்டு, நிகழ்வை பதிவு செய்து, தங்களது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கிட அன்புடன் அழைக்கின்றேன். வாருங்கள்! சந்திப்போம்! நன்றி! என சி. விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















